மேற்கு உகாண்டாவில் பள்ளி ஒன்றில் தாக்குதல் நடத்தி சுமார் 41 மாணவர்களைக் கொன்ற ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் காங்கோ ஜனநாயகக் குடியரசின் எல்லைக்கு அருகில் உள்ள லுபிரிஹ மேல்நிலைப் பள்ளியில் (lhubiriha secondary school) நடைபெற்றுள்ளது.
இந்த பள்ளி தனியாருக்கு சொந்தமானது மற்றும் காங்கோ எல்லையில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பள்ளியின் மீது தாக்குதல் நடத்தியதுடன், அங்கு இருக்கும் மாணவர் விடுதியும் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த விடுதியில் இருந்த உணவுப் பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றதாகவும், உடல்கள் பள்ளியில் இருந்து மீட்கப்பட்டு புவேரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் இடம்பெற்ற இந்த பள்ளியில் 13 முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் படிக்கின்றனர். இறந்தவர்களில் 39 பேர் மாணவர்கள் என்றும் இருவர் கிராமவாசிகள் என்றும் உள்ளூர் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
ஆண்கள் விடுதியை நோக்கி பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசியதுடன் பள்ளியில் இருந்து வெளியேற முற்பட்ட மாணவ மற்றும் மாணவிகள் மீது பயங்கரவாதிகள் கத்தியால் குத்தி கொடூர தாக்குதலை அரங்கேற்றினர்.
இந்த தாக்குதலில், தீயில் உடல் கருகி 20 பேரும், கத்திக்குத்தில் காயம் பட்டு 17 மாணவர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், 4 ஊழியர்களும் இத்தாக்குதலில் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து விரைந்த அந்நாட்டு இராணுவம் மற்றும் காவல்துறையினர் பள்ளியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சுமார் 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் பல மாணவிகளை காணவில்லை என்று கூறப்படுகிறது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பினர் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.