நாடளாவிய ரீதியில் பல வியாபாரிகள் இன்னமும் கட்டுப்பாட்டு விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்வதாக நுகர்வோர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
கட்டுப்பாட்டு விலை 44 மற்றும் 46 ரூபாவாக இருந்த போதிலும் பல வியாபாரிகள் ஒரு முட்டையை 47 முதல் 60 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருவதாகவும், இன்றைய நாட்களில் சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒரு கிலோ முட்டை விற்பனைக்காக நுகர்வோர் அதிகாரசபையானது ஒரு கிலோ பழுப்பு முட்டைக்கு 920 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை முட்டைக்கு 880 ரூபாவாகவும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்துள்ளதாகவும் அதனடிப்படையில் ஒரு முட்டையானது 55 தொடக்கம் 57 ரூபாய் வரையில் விலை குறிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகளை கண்டறிய தொடர்ந்து சோதனை நடத்தப்படும் என்றும், அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக நீதிமன்றம் 100,000 ரூபாய் அபராதம் விதிக்கும் என்றும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
முட்டைக்கு அதிக கேள்வி நிலவுவதால் வியாபாரிகள் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்வதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.