சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இன்று வாபஸ் பெற்றுள்ளனர்.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, நிரம்பிய சபைக்கு முன்னால், புத்தர், இஸ்லாம் மற்றும் இந்து மதம் தொடர்பாக அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார்.
அவரது கருத்துகளின் வீடியோ காட்சிகள் நாட்டில் உள்ள பௌத்த மதத்தை பின்பற்றுபவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சையை அடுத்து,போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கடந்த மே 15ஆம் திகதி போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றில் பயணத் தடையைப் பெற்றுக்கொண்ட போதிலும், போதகர் நாட்டை விட்டு வெளியேறியமை தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து,போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, அடிப்படை உரிமைகள் (FR) மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபர் அறிவித்திருந்தார்.