பணமோசடி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கையில் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட ஜெரோம் பெர்னாண்டோ சிங்கப்பூரில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றுள்ளார்.
ஜெரோம் பெர்னாண்டோவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவின்படி, அவர் நேற்று (06) இங்கிலாந்தில் சேவையொன்றை நடத்தியதாகத் தெரிகிறது.
“ஜெரோம் பெர்னாண்டோ ஜூலை 06 வியாழன் முதல் மூன்று நாட்களுக்கு ஐக்கிய இராச்சியத்தில் பணிபுரிவார்” என்று அந்த பதிவில் பதிவிடப்பட்டிருந்தது.
பௌத்தம், இஸ்லாம் மற்றும் இந்து மதம் குறித்து அவர் கூறிய சர்ச்சைக்குரிய அறிக்கைகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கிய நிலையில், கடந்த மே 16ஆம் திகதி அவர் சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றார்.
அதன்படி அவர் சிங்கப்பூரில் இருந்து இங்கிலாந்து சென்றுள்ளார். பின்னர், ஜெரோம் பெர்னாண்டோ கடந்த மே மாதம் 21ஆம் திகதியன்று ஒரு நேரடி வீடியோவில் தனது கருத்துக்கள் மூலம் பௌத்தம், இந்து மதம் மற்றும் இஸ்லாம் மதத்திற்கு ஏதேனும் தீங்கு விளைந்திருப்பின் அதற்காக மன்னிப்பு கோரியிருந்தார்.
அதன் பின்னர் அவர் இலங்கைக்கு வராத நிலையில், கடந்த ஜூன் மாதம் 02ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து மனைவி மற்றும் பிள்ளைகள் இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெரோம் பெர்னாண்டோ விடயத்தில் இப்படி இருந்தாலும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு ICCPR சட்டத்தின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நடாஷா எதிரிசூரிய 39 நாட்களுக்குப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.