மலையக பல்கலைக் கழகம் நிச்சயம் மலரும். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பல்கலைக்கழக விவகாரத்தை வைத்து அரசியல் நடத்தாமல், அந்த மகத்தான பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
மலையக இளைஞர், யுவதிகளின் நீண்ட நாள் எதிர்ப் பார்ப்பாக இருந்த மலையகத்திற்கான தனி பல்கலைக் கழகம் நிறுவுவதற்கான இறுதிக் கட்ட வேலைத் திட்டங்களுக்கான கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பின் பேரில் கொட்டகலைக்கு வருகை தந்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம் பெற்றது.
கொட்டகலை ஆசிரியர் கலாசாலையை கேந்திரமாக கொண்டு பல்கலைக் கழகத்தின் முதற்கட்ட தொகுதியினை நிறுவுவதற்கும், மேலும் நிர்வாக ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு செல்வதற்குமான இறுதிக்கட்ட கலந்துரையாடலாக இது அமையப் பெற்றது.
மேலும், பல்லைக் கழகத்தில் எந்த விதமான பாட விதானங்கள் உள்ளடக்கப் பட வேண்டும் என்பது தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
மிக விரைவில் இலங்கை அரசு மற்றும் சர்வதேச ரீதியிலான உதவியுடன் இங்கு பல்கலைக் கழகம் நிறுவுவதற்கான வேலைத் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கை நடைபெற்றது.
அத்தோடு, அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க கல்வி அமைச்சர், பத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரிக்கும் விஜயமொன்றை மேற்கொண்டார்.
கல்லூரியின் பீடாதிபதி மற்றும் மாணவர்களுடன் அமைச்சர் ஜீவன் தொண்டமானும், கல்வி அமைச்சரும் கலந்துரையாடினார்கள். கல்வி நடவடிக்கைகள் தொடர்பிலும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் கேட்டறிந்துக் கொண்டார்கள்.
இதன் போது கல்லூரிக்கு தேவையான விடயங்கள் தொடர்பில் எம்மிடம் மாணவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது. அவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதியளித்தார்.
அது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கும் உடனடி பணிப்புரையை வழங்கினார்.
இந்த சந்திப்புகளின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் தெரிவித்தமை பின்வருமாறு,
“பல்கலைக் கழகத்துக்கான அனுமதி பல்கலைக் கழகங்களுக்கான ஆணைக் குழுவிடம் இருந்து ஏற்கனவே பெறப்பட்டிருந்தது. கொரோனா, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் பணிகள் ஸ்தம்பித்தன.
இது தொடர்பில் அமைச்சரவையில் ஜனாதிபதியிடம் பேசினேன். கல்வி அமைச்சரிடமும் கலந்துரையாடினேன். இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இருவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
10 ஏக்கர் காணி உள்ளது. தேவையேற்படின் அங்கு இருக்கும் அரச காணிகளையும் பெறலாம். பல்கலைக்கழகம் அமைந்தே தீரும். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.
உப பிரதேச செயலகம் வந்த போது அரசியல் நடத்தினர். நாம் பிரதேச செயலகத்தை இன்று கொண்டு வந்துள்ளோம். 4 ஆயிரம் இந்திய வீட்டு திட்டத்தை முழுமைப் படுத்தியுள்ளோம்.
அடுத்த 10 ஆயிரம் வீட்டுத்திட்டதையும் ஆரம்பிக்கவுள்ளோம். வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன,” என்றார்.