கல்வித்துறையிலும் சமூகத்தை ஒன்றுபடுத்துவதிலும் ஜாமிஆவின் பங்களிப்பு பாராட்டுக்குரியது: அஸ்ஸெய்யித் அபீபுத்தீன் மௌலானா ஜீலானி

Date:

இலங்கைக்கு வருகை தந்துள்ள பக்தாதைச் சேர்ந்த சர்வதேச இஸ்லாமிய மார்க்க அறிஞர் சங்கைக்குரிய அஸ்ஸெய்யித் அபீபுத்தீன் மௌலானா ஜீலானி அவர்கள் நேற்றைய தினம் (02) பேருவளை ஜாமிஆ நளீமியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்றினார்.

அஹ்லுல் பைத்தைச் சேர்ந்தவரும் குதுபுல் அக்தாப் அஷ்ஷேக் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் பேரரும் அல்வாரிஸீன் நம்பிக்கை நிதியத்தினதும் மலேசியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தாருல் ஜீலானி தஃவா அமைப்பினதும் தலைவருமான மௌலானா அபீபுத்தீன் ஜீலானி அவர்கள் திரண்டிருந்த ஜாமிஆ நளீமியாவின் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது அறிவின் நோக்கத்தையும் உண்மையான அறிவைத் தேடுபவரின் பண்புகளையும் எடுத்துரைத்தார்.

அறிவுத் தேடலில் இஹ்லாஸையும் அர்ப்பணிப்பையும் முன்னிலைப்படுத்திப் பேசிய அவரின் உரை சமுகமளித்தோர் மத்தியில் தாக்கம் செலுத்துவதாக அமைந்திருந்தது.

வேறுபாடுகளுக்கு மத்தியில் சமூகத்தை ஒன்றுபடுத்தும் வகையிலான ஜாமிஆவின் தொலைநோக்கையும் பணியையும் சிலாகித்துப் பேசிய அவர், கல்வித்துறையிலும் அறிவுத்துறையிலும் ஜாமிஆவின் முயற்சிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

மௌலானா அபீபுத்தீன் ஜீலானி அவர்களை வரவேற்று உரையாற்றிய ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் தலைவர் உஸ்தாத் அகார் முஹம்மத், பல்வேறுபட்ட பின்னணிகளையும் அனுபவங்களையும் கொண்ட அறிஞர்களை வரவேற்பதில் ஜாமிஆவின் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டினார்.

புலமையை மேம்படுத்துவதற்கும் செறிவூட்டுதற்குமான கலாச்சாரமொன்றை வளர்த்தெடுக்கும் வகையில் கலாநிதி பஸ்லுர் ரஹ்மான் அன்ஸாரி, மௌலானா அபுல் ஹஸன் நத்வி, ஷேக் முஹம்மத் அல் கஸ்ஸாலி, ஷேக் அப்துஹு யமானி, ஷேக் அபூ பக்ர் மஷூர் போன்ற தலைசிறந்த அறிஞர்களையெல்லாம் வரவேற்கும் இடமாக நளீமியா உள்ளது என உஸ்தாத் அகார் எடுத்துரைத்தார்.

சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் பிரிவினருக்கும் மத்தியில் அன்பையும் பரிவையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஊக்கப்படுத்தி வேற்றுமைகளுக்கு மத்தியில் சமூகத்தை ஒன்றுபடுத்தும் நோக்கில் அர்ப்பணிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள ஜாமிஆவின் மன்ஹஜை உஸ்தாத் அகார் இதன்போது தெளிவாக விளக்கினார்.

ஜாமிஆ நளீமியாவுக்கான அஸ்ஸெய்யித் அபீபுத்தீன் மௌலானா ஜீலானி அவர்களின் விஜயத்தை ஒருங்கிணைத்த கலாநிதி அஸ்வர் அவர்களுக்கு அவர் நன்றியையும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...