கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு தடையற்ற நீர் விநியோகத்தை உறுதிப்படுத்தும் நிலையில் உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளுக்கு தடையில்லா நீர் விநியோகத்தை உறுதி செய்வதில் சில சிரமங்களை எதிர்நோக்கிய போதிலும், கொழும்பு மற்றும் கம்பஹா மக்களுக்கு தொடர்ச்சியாக நீர் வழங்குவதற்கு வளங்களை நிர்வகித்து வருவதாக பிரதி பொது முகாமையாளர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக களனி ஆற்றின் குறுக்கே அம்பத்தளை நோக்கி மணல் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த தடுப்புச்சுவர் மூலம் ஆற்றின் நீர்மட்டம் குறையும் வேகத்தை குறைக்க முடியும் என பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார்.
வெப்பம் காரணமாக நீரின் தேவை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சுத்திகரிக்கப்பட்ட நீரை பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த சில நாட்களாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
நீர் மின் உற்பத்திக்கு நீர் திறந்து விடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பயிர்களைப் பாதுகாக்க நீரை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.