பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை தொடங்கிய வன்முறை நீடித்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று இஸ்லாமியர்கள் யாரும் மசூதி மற்றும் திறந்த வெளியில் தொழுகை நடத்த வேண்டாம் என்று முஸ்லிம் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள நுஹ் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை விஷ்வ இந்து பரிஷித் அமைப்பினர் பேரணியை நடத்தினர்.
இதனை அம்மாவட்ட பாஜக தலைவர்தான் தொடங்கி வைத்திருக்கிறார். இந்த பேரணியில் இரு தரப்பினருக்கிடையே மோதல் வெடித்துள்ளது.
இந்த மோதல்தான் வன்முறையாக உருவெடுத்துள்ளது. இதில் 2 பொலிஸார் மற்றும் 4 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
5 மாவட்டங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருந்திருக்கிறது.
வன்முறையின் ஒரு பகுதியாக செக்டார் 57ல் உள்ள அஞ்சுமான் ஜமா மசூதி செவ்வாய்க்கிழமை அதிகாலை தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது.
மட்டுமல்லாது அந்த மசூதியில் இமாமாக பணியாற்றி வந்த 19 வயது ஹபீஸ் சாத் கொல்லப்பட்டுள்ளார். கடைகள் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 120க்கும் அதிகமான வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஏறத்தாழ 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 120 வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்முறையை கட்டுப்படுத்த தவறியதாக நுஹ் மாவட்ட எஸ்பி வருண் சிங்லாவை மாநில அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. ஆனால் இன்னும் பதற்றம் தணியவில்லை.
இந்நிலையில் வெள்ளிக்கிழமையான இன்று இஸ்லாமியர்கள் யாரும் மசூதி அல்லது திறந்த வெளியில் தொழுகை செய்ய வேண்டாம் என்று முஸ்லீம் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து குர்கான் முஸ்லிம் கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் அல்தாஃப் அஹ்மத் கூறுகையில், “குருகிராமில் உள்ள இமாம்கள் வெள்ளிக்கிழமையான இன்று ஜும்ஆ தொழுகைக்காக மசூதிகளுக்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர்.
இஸ்லாமியர்களை பொறுத்த அளவில் ஜும்ஆ தொழுகை என்பது ஜமாஅத்தில் நடக்க வேண்டிய கட்டாயக் கடமையாகும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள இந்த கலவரம் காரணமாக மசூதியில் தொழுகை நடத்த வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
அதேபோல முஸ்லிம் ஏக்தா மஞ்ச் தலைவர் ஹாஜி சஜ்ஜாத் கான் கூறுகையில், “நு மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையை காரணமாக, எங்கள் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
மசூதிகளில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தாலும் தற்போது இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த முன்வரவில்லை. முன்னதாக வலதுசாரி அமைப்புகள், பொது இடங்களில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதை தடுக்க வேண்டும் என்று காவல்துறை துணை ஆணையரிடம் மனு அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.