ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து பொது விடுமுறையுடன் கொண்டாட்டங்களில் ஈடுப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினர்.
ஆகஸ்ட் 15ஆம் திகதி தலைநகர் காபூலுக்குள் தலிபான்கள் நுழைந்தனர். பின்னர் அங்கு ஆப்கானிய பாதுகாப்புப் படைகள் அமைக்கப்பட்டன.
இதனையடுத்து தலிபான்கள் மீண்டும் ஆட்சியை பிடித்து நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றது.
தலிபான்கள் காபூல் வீதிகளில் ஊர்வலமாக சென்று கைவிடப்பட்ட அமெரிக்க தூதரக கட்டிடத்திற்கு அருகிலுள்ள மசூத் சதுக்கத்தில் ஒன்று கூடினார்கள். சிலர் தங்கள் ஆயுதங்களை ஏந்திச் சென்றதுடன், மற்றவர்கள் கீதங்கள் முழங்க, இளம் சிறுவர்கள் இஸ்லாமிய நம்பிக்கைப் பிரகடனம் பொறிக்கப்பட்ட இயக்கத்தின் வெள்ளைக் கொடியை ஏந்தி சென்றவாறு கொண்டாடினர்.
இது தொடர்பில் தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில், “காபூலை கைப்பற்றியதன் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில், முஜாஹித் தேசமான ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அமைப்பை நிறுவுவதற்கு வழி வகுக்கும் இந்த வெற்றி பாராட்டுக்குறியது. இந்த மாபெரும் வெற்றிக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
காபூலைக் கைப்பற்றியதன் மூலம், பெருமைமிக்க தேசமான ஆப்கானிஸ்தானை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இப்போது நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே தலைமையின் கீழ் ஷரியாவின் சட்டப்படி (இஸ்லாமிய சட்டம்) நாடு நிர்வகிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அமைப்பை நிறுவுவதற்கு வழி வகுக்கும் இந்த வெற்றி பாராட்டுக்குறியது. காபூலைக் கைப்பற்றியதன் மூலம், பெருமைமிக்க தேசமான ஆப்கானிஸ்தானை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பது மீண்டும் நிரூபிக்கப்படுள்ளது.
எந்தவொரு ஆக்கிரமிப்பாளரும் எங்கள் நாட்டின் சுதந்திரத்தை அச்சுறுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.