வக்பு சொத்தில் மோசடி செய்வோருக்கு எதிராக சட்டநடவடிக்கை. 90 வீதமான பள்ளிவாசல்களில் கருத்து முரண்பாடு, நிர்வாகப் பிரச்சினை. நாட்டில் முதலிடத்தில் கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனம் – பணிப்பாளர் தெரிவிப்பு

Date:

 

அநேகமான பள்ளி வாசல்களுக்கு வருமானம் கிடைக்கக் கூடிய வக்பு செய்யப்பட்ட கடைகள், சொத்துக்கள் உள்ளன. இவைகளை ஒரு சிலர் வாடகைக்குப் பெற்றுக் கொண்டு அதற்கு உரித்தான அறவீடுகளைச் செலுத்தாமல் பல விதமான இடையூறுகளை விளைவித்து வருகிறார்கள். தற்போது எங்களது திணைக்களத்தினால் இது ஒரு முக்கியமான வேலைத் திட்டமாக முன்னெடுக்கப்படுகிறது. பள்ளிவாசலுக்கு உரித்தான அசையும் அசையா சொத்துகள் பற்றி முழுமையான தகவல்களைப் பெற்று முறையற்ற விதத்தில் கையாளப்படுகின்ற சொத்துக்களுக்காக சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுப்பதற்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றோம் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் பைஸல் ஆப்தீன் தெரிவித்தார்.

 

பாகிஸ்தான் நாட்டு வதிவிடப் பிரதிநிதியும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் சபை உறுப்பினரும் பள்ளிவாசலின் தலைவருமான அப்ஸால் அஹமட் மரைக்கார் தலைமையில் கண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் கண்டி மாவட்டப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வின் போது

பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் மேலும் உரையாற்றுகையில்,

 

வக்பு சொத்து மோசடிக்கு எதிராக நடவடிக்கை

 

இலங்கையிலுள்ள பள்ளிவாசல்களில் காணப்படும் பிரச்சினைகளில் மிக முக்கியமான பிரச்சினை வக்பு சொத்துக்களைப் பராமரித்தல் ஆகும். அநேகமான பள்ளி வாசல்களுக்கு வருமானம் கிடைக்கக் கூடிய வக்பு செய்யப்பட்ட கடைகள், சொத்துக்கள் உள்ளன. இவைகளை ஒரு சிலர் வாடகைக்குப்  பெற்றுக் கொண்டு அதற்கு உரித்தான அறவீடுகளைச் செலுத்தாமல் பல விதமான இடையூறுகளை விளைவித்து வருகிறார்கள் என்று நிறைய முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இத்தகைய பிரச்சினைகள் தொடர்பில் கண்டி மாவட்டத்திலோ அல்லது வேறு இடங்களிலோ இடம்பெற்றாலும் அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகின்றோம். தற்போது எங்களது திணைக்களத்தினால் இது ஒரு முக்கியமான வேலைத் திட்டமாகக் கொள்ளப்பட்டு பள்ளிக்கு உரித்தான அசையும் அசையா சொத்துகள் பற்றி முழுமையான தகவல்களைப் பெற்று முறையற்ற விதத்தில் கையாளப்படுகின்ற சொத்துக்களுக்காக சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுப்பதற்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றோம். நாங்கள் ஒரு சில மாவட்டங்களில் நீதி மன்றங்களிலும்  முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளோம். வெகு விரைவில் கண்டி மாவட்டத்தில் நிலவும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளோம். அவ்வாறு பிரச்சினைகள் இருப்பின் எம்மிடம் முறைப்பாடுகளை பதிவு செய்யுங்கள் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். கண்டி மாவட்டத்தில் இருந்து பல அழைப்புக்கள் வந்த போதிலும் அவை எல்லாவற்றிலும் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்காமல் போனதையிட்டு நான் மனம் வருந்துகின்றேன். இன்றைய நாளில் அதற்கான வாய்ப்பைத் தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

இலங்கையில் சிறந்த பள்ளிவாசல்கள் சம்மேளனம்

 

பள்ளிவாசல்கள் சம்மேளனம் என்று வருகையில் இலங்கையில் மிகச் சிறந்த பள்ளிவாசல்கள் சம்மேளனமாக கண்டி மாவட்டச் சம்மேளனம் திகழ்கிறது.

அடுத்தது, காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனம் மிகச் சிறந்த முறையில் செயற்பட்டு வருகின்றது. இந்த இரு சம்மேளனங்கள் செயற்படுவதைப் போன்று ஏனைய மாவட்டங்களிலுள்ள பள்ளிவாசல்கள் சம்மேளனங்களும் இயங்கினால் பள்ளிகளில் இருக்கக் கூடிய பிரச்சினைகளை சுமுகமாக தீர்வு கண்டு ஒரு முன்னேற்றப் பாதையில் செல்லலாம் என்று நான் கருதுகின்றேன் என அவர் மேலும் கூறினார்.

 

முன்னுதாரணமான பள்ளிவாசல்

 

இங்கு அமைந்துள்ள ஜும்ஆப் பள்ளிவாசல் நாட்டிலுள்ள பள்ளிவாசல்களுக்கு ஒரு முன்னுதாரணமாக காட்சியளிக்கின்றது. இங்கு வருகை தந்த போது பல விடயங்களை அவதானித்தேன். விசேடமாக பள்ளிவாசலின் வளாகத்தில் டி. பி. கனணி தொழில் நுட்ப கூடம் அமைந்துள்ளது. இது மாணவர்களுக்கு மிகுந்த பயனுள்ள விடயமாகும். நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய செயற்கை நுண்ணறிவு கல்விக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டி. பி கல்விக் கூடத்தில் முஸ்லிம் பெண் மாணவிகளும் வந்து கலந்து கொண்டு கற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பத்தை அளித்தால் இன்னும் சிறப்பாக அமையும் என நான் கருதுகின்றேன். பெண் பிள்ளைகளுக்கும் சில மணித்தியாலங்களை ஒதுக்கி அவர்களும் இங்கு வந்து கற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என பள்ளி நிர்வாகத்திடம் நான் கேட்டுக் கொள்கின்றேன்.

 

நாட்டில் மக்களுக்கிடையேயான நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு குறித்து மிகவும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். புத்தசாசன மத கலாசார அமைச்சின் கீழ் அமைந்துள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் , இந்து சமய கலாசாரத் திணைக்களம், பௌத்த சமய கலாசாரத் திணைக்களம் ஆகியன சர்வ சமய நல்லிணக்கச் செயற்பாட்டை கருத்திற் கொண்டு செயற்பட்டு வருகின்றன. அதற்கேற்ற வகையில் இப்பள்ளிவாசலில் நல்லிணக்க நிலையம் அமைந்துள்ளதையிட்டு நான் சந்தோசம் அடைகின்றேன். அதனை மேன் மேலும் திறன்படச் செய்வதற்கு பள்ளி நிர்வாகம் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் நல்லருள் புரிய வேண்டும் என அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றேன்.

 

அதே போன்று ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் சிறந்த ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பதில் இந்த பள்ளி நிர்வாகம் முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது. கொரோனா காலத்தில் ஜனாஸா நல்லடக்க விடயம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் பெரும் பங்களிப்பை இப்பள்ளி நிர்வாக சபையினர் வழங்கினர். கண்டி பேராதனை வைத்தியசாலைகளில் மரணம் அடைந்த உடல்களை நல்லடக்கம் செய்யும் விடயத்தில் இப்பள்ளிவாசல் நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி செயற்பட்டு வருகிறது. அதே போன்று இப்பள்ளி வளாகத்தில் சிறந்த அரபு மத்ரஸாவினையும் காணக் கூடியதாக இருக்கின்றது.

 

ஒரே பாடத்திட்டத்தின் கீழ் அரபு மத்ரஸாக்கள் வெகு விரைவில்

 

கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் பேசப்பட்ட விடயத்தில் எமக்கு அறிவுறுத்தப்பட்ட முக்கியமான கருத்து யாதெனில் இலங்கையில் காணப்படக் கூடிய சகல அரபு மத்ரஸாக்களுக்கும் ஒரே பாடத் திட்டம் இருக்க வேண்டும் என்பதாகும். இந்த வருடத்திற்குள் சகல அரபு மத்ரஸாக்களிலும் ஒரே பாடத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருக்கின்றோம். அந்தப் பாடத்திட்டத்தின் தயாரிப்புப் பணிகள் இறுதித் தறுவாயில் உள்ளது. சகல அரபு மத்ரஸாக்களதும் பாடத்திட்டத்தை வெகு விரைவில் அமுல்படுத்துவதற்காக எங்களது திணைக்களம் ஈடுபட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

90 வீதமான பள்ளிகளில் கருத்து வேறுபாடு, நிர்வாகப் பிரச்சினைகள்

 

இலங்கையில் 3500 க்கும் அதிகமான பள்ளிவாசல்கள் உள்ளன. நூற்றுக்கு 10 , 15 வீதமான பள்ளிவாசல்கள் தான் பிரச்சினைகள் இல்லாமல் இருக்கின்றன. 90 வீதமான பள்ளிவாசல்களில் நிர்வாகத் தெரிவு உட்பட எல்லா விடயங்களிலும் கருத்து முரண்பாடுகளும், பிரச்சினைகளும் காணப்படுகின்றன. இது ஒரு கவலை தரும் விடயமாகும். இது குறித்து நாம் அனைவரும் நன்கு அறிவோம். இப்படியான பிரச்சினைகள் இருந்தால் மக்களுக்கான சேவைகளை வழங்க முடியாது. பள்ளி நிர்வாகம் என்பது என்ன என்பது இன்று கேள்விக் குறியாகியுள்ளது. இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இந்தப் பள்ளிவாயல் நிர்வாகம் இலங்கையிலுள்ள ஏனைய பள்ளிவாசல்களுக்கு ஒரு முன்மாதிரியான நிர்வாகத்தை செய்து கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. உண்மையிலேயே இப்பள்ளிவாசலை நோக்குகின்ற போது எமது உள்ளம் பூரிப்படைகின்றது.

 

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...