நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண வைபவத்திற்காக இலங்கை மின்சார சபை விநியோகித்த மின்சாரத்திற்கு செலுத்த வேண்டிய தொகை இன்னும் செலுத்தப்படவில்லை என மின்சார சபை தெரிவித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விடுத்த கோரிக்கைக்கு அமைய இலங்கை மின்சார சபை இந்த தகவலை வழங்கியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு வழங்கிய இந்த தற்காலிக மின் விநியோகித்திற்காக 26 லட்சம் ரூபாவுக்கும் மேல் செலுத்தப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை, நளின் ஹேவகேவுக்கு வழங்கியுள்ள பதிலில் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கோரிக்கைக்கு அமைய கடந்த 2019 ஆண்டு 9 ஆம் மாதம் 15 ஆம் திகதி வீரகெட்டிய வீட்டில் நடந்த வைபவத்திற்கு வழங்கிய தற்காலிக மின் விநியோகத்திற்காக 26 லட்சத்து 82 ஆயிரத்து 246.57 ரூபா செலுத்தப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை கூறியுள்ளது.