வட மாகாணத்தில் முன்னணி பாடசாலைகளில் மின்சார கட்டணம் மற்றும் ஏனைய பாடசாலை செலவுகளுக்காக பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் அறவிட முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
பாடசாலைகள் மாணவர்களிடம் நிதியை பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளும் நிலையில் பெற்றோர்கள் பணம் வழங்க வேண்டாம். மின்சார கட்டணத்தை உயர்த்திய அரசாங்கம் பாடசாலைகளுக்கான மின்சார கொடுப்பனவுகளையும் அதிகரித்தே ஆக வேண்டும்.
இதற்கமைய பாடசாலைகள் மாணவர்களிடம் பணம் கேட்டால் பெற்றோர்கள் வழங்க வேண்டிய தேவை இல்லை. அவ்வாறு நிர்பந்திக்கப்பட்டால் எமக்கு முறைப்பாடு தாருங்கள் நாம் அதற்கு கடுமையான நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.
வடக்கில் உள்ள பிரபல பாடசாலைகள் சில பாடசாலை மின்சார கட்டணம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை ஈடு செய்வதற்காக மாணவர்களிடம் பணம் அறவிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.