கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த இஸ்லாமிய சிறை கைதி அப்துல் ஹக்கீம் உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
கடந்த 1998 ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அப்துல் ஹக்கீம், சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு விடுப்பு வழங்கக் கோரி, அவரது மனைவி ரஹ்மத் நிஷா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் இந்நிலையில் அவர் நேற்றையதினம் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக நாமி தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில்,
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்புச்சகோதரர் சகோதரர் அப்துல் ஹக்கீம் மூளை நரம்புக் கட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

கடந்த காலங்களில் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சகோதரர்கள் அபு தாகிர், சபூர் ரகுமான், ரிசுவான் உள்ளிட்ட ஐவர் சிறைவாசிகளாகவே மரணித்த கொடுமைகள் அரங்கேறிய நிலையில், தற்போது சகோதரர் அப்துல் ஹக்கீம் அவர்களும் உயிரிழந்துள்ளது அக்கொடுங்கோன்மை துயரங்களின் நீட்சியும், திராவிட கட்சிகள் ஒருபோதும் இஸ்லாமிய மக்களுக்கு உண்மையான துணையாக இருக்காது என்பதற்கான சாட்சியுமாகும்.
மூளை நரம்புக் கட்டியால் பாதிக்கப்பட்ட சகோதரர் அப்துல் ஹக்கீமை உரிய காலத்தில் விடுதலை செய்து, முறையான மருத்துவம் அளிக்கப்பட்டிருந்தால் அவர் இன்னும் நீண்ட காலத்திற்கு அவரது குடும்பத்தினருடன் வாழ்ந்திட செய்திருக்க முடியும்.
ஆனால், திமுக அரசு பாஜகவின் எதிர்ப்புக்கு பயந்து, சிறிதும் மனச்சான்று இன்றி இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய மறுத்ததன் விளைவே, தற்போது சகோதரர் அப்துல் ஹக்கீம் உயிரும் பறிபோயுள்ளது என்று தெரிவித்துள்ளார்.