இலங்கை, பாகிஸ்தான் இடையிலான மத கலாச்சார சுற்றுலாவை மேம்படுத்த பாகிஸ்தான் ஏற்பாடு!

Date:

இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின் காந்தாரா பாரம்பரியம் பற்றிய கருத்தரங்கொன்றை நேற்று (13) ஏற்பாடு செய்திருந்தது.
பிரபல நாகாநந்தா சர்வதேச பௌத்த கற்கை நிறுவனத்தில் (NIIBS) நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், இராஜதந்திரிகள், முக்கிய பிக்குகள், அகில இலங்கை பௌத்த சபை உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

புத்தசாசன மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் ஃபாரூக் புர்கி தனது வரவேற்பு உரையில் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான சிறந்த நட்புறவு பற்றி எடுத்துக் கூறினார். இரு நாடுகளினதும் மக்களுக்கு இடையிலான தொடர்புகள் அடிக்கடி நிகழ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய உயர் ஸ்தானிகர், மத மற்றும் கலாச்சார சுற்றுலாத்துறையில் பாகிஸ்தான் கொண்டிருக்கும் அபரிமிதமான வாய்ப்புக்களை எடுத்துரைத்தார். இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே நிறுவனரீதியான தொடர்புகளின் அவசியத்தையும் அவர் இங்கு வலியுறுத்தினார்.

பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மத விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தனது உரையில் பாகிஸ்தானின் பாரிய கலாச்சார மற்றும் மத சுற்றுலாத் திறனைப் பற்றி, குறிப்பாக அதன் செழுமையான காந்தாரா பாரம்பரியத்தைப் பற்றி இலங்கை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான உயர்ஸ்தானிகராலயத்தின் முயற்சிகளைப் பாராட்டினார். இருதரப்பு கருத்துக்கள் மற்றும் அனுபவப் பரிமாற்றத்திற்காக இரு நாடுகளும் பாரம்பரியத்துக்கான மன்றமொன்றை உருவாக்கிச் செயற்பட வேண்டும் என்று அமைச்சர் தனது உரையில் முன்மொழிந்தார்.

இலங்கையின் முக்கிய அறிஞர்கள் பலரும் இங்கு உரையாற்றியதோடு பாகிஸ்தானின் இரண்டு புகழ்பெற்ற பேச்சாளர்களான பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தொல்லியல் துறையின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அப்துல் சமத், மற்றும் தக்ஸிலா அருங்காட்சியகத்தின் பணிப்பாளர் இக்பால் கான் ஆகியோரும் உரையாற்றினர்.

பாகிஸ்தானின் காந்தாரா பாரம்பரியம் தொடர்பான புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்களின் காட்சிப்படுத்தல், பாகிஸ்தானின் காந்தாரா பாரம்பரியம் குறித்த ஆவணப்படம் வெளியீடு ஆகியனவும் கருத்தரங்கின் சிறப்பம்சங்களாக இடம் பெற்றன.

நெருங்கிய சகோதரத்துவ உறவுகளையும் கலாச்சார தொடர்புகளையும் மேலும் கட்டியெழுப்பும் வகையில் மத சுற்றுலாவை மேம்படுத்துதல் மற்றும் காந்தாரா பாரம்பரியத்தை பாதுகாத்தல் மற்றும் முன்னிலைப்படுத்துதல் ஆகியவற்றில் ஒத்துழைப்பது தொடர்பில் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் விரைவில் கைச்சாத்திடப்பட உள்ளதாக இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சீரற்ற வானிலையால் சுமார் 1000 பாடசாலைகள் பாதிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 9 மாகாணங்களிலும் சுமார் ஆயிரம் பாடசாலைகள்...

காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தினமும் மீறுகிறது: துருக்கி, எகிப்து குற்றச்சாட்டு.

காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோதும், அங்கே போர் மேகங்கள்...

பேரிடர் காரணமாக மன அழுத்தத்தை அனுபவித்தால் 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

பேரிடர் காரணமாக மன அழுத்தத்தை அனுபவித்தால், தேசிய மனநல நிறுவனத்தின் 1926...

கண்டி- கொழும்பு பொது போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை

இயற்கை அனர்த்தங்களின் பின்னர் கொழும்பு மற்றும் கண்டிக்கிடையிலான பொது போக்குவரத்து சேவைகளை,...