2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதா அல்லது குறித்த தினத்தில் நடத்துவதா என்பது தொடர்பில் நாளை (21) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையினை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டதுடன், அதற்கான நேர அட்டவணையும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 18 ஆம் திகதி உயர்தர பரீட்சையினை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்ததுடன், ஒத்திவைப்பதற்கான தீர்மானம் ஏற்கனவே கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது.