2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சர்வதேச விசாரணைகள் அவசியம் எனவும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் காத்தான்குடி நகர சபை தவிசாளரும் காத்தான்குடி தொழில்வாண்மையாளர் சிவில் அமைப்புக்களின் ஒன்றிய தலைவருமான யு.எல்.எம்.என். முபின் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் மற்றும், ‘செனல் 4’ வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பிலும் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர முஸ்லிம் மக்கள் அதிகளவில் பதிக்கப்பட்டதாகவும் தங்களுடைய சமூக மக்களுடைய வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டதுடன் அரசியல் தலைவர்களை பதவிகளில் இருந்து விலக்குவதற்கு சூழ்ச்சிகளும் இடம்பெற்றன.
மேலும் கவிதைகள் எழுதியவர்களுக்கு எதிராக பயங்கரவாத சட்டம் பிரயோகிக்கப்பட்டதாகவும் முஸ்லிம் வைத்தியர்கள் மீது பழிகள் சுமத்தப்பட்டு தாங்கள் உள உடல் ரீதியான துன்பங்களை அனுபவித்ததுடன் இவற்றுக்கு நீதியை பெற்றுக்கொள்ளும் வகையில் ‘செனல் 4’ வெளியிட்ட தகவல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் அவசியம் என கூறப்பட்டது.
மேலும் இலங்கையில் நீதித்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளமையும் நீதி துறைக்கு சுதந்திரம் இல்லை என்பதும் பல்வேறு புத்திஜீவிகளால் முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டு.
இந்தத்தாக்குதல் தொடர்பில் இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டும் அதற்கு என்ன நடந்தது என்பது இதுவரை அறியப்படவில்லை போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டதுடன் அண்மையில் குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் நீதித்துறையை பற்றி விமர்சனங்கள் எழுந்ததாகவும் கூறப்பட்டது.
எனவே இவற்றுக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச விசாரணைகளே ஒரே வழி என தெரிவிக்கப்பட்டது.
இந்த ஊடக சந்திப்பில் முஹைதீன் சலி சட்ட ஆலோசகர் ஏ.எல்.எம். சரீப்தீன் ஓய்வு பெற்ற உதவி திட்ட பணிப்பாளர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.