நாட்டில் கடந்த 12 மாதங்களில் 36 பகிடிவதை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள 17 பல்கலைக்கழகங்களில் குறித்த எணிக்கையிலான பகிடிவதை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக 57 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் தொடர்ந்து பகிடிவதை சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
இதன்படி, பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 11 பேர் அண்மையில் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
புதிய மாணவர்களை பகிடிவத்தைக்குட்படுத்திய குற்றச்சாட்டில் இவ்வாறு இடைநிறுத்தபட்டனர்.
இந்த நிலையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிலையங்களில் மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக பொலிஸாரினால் அண்மையில் விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்படி, 076 545 3454 எனும் வாட்ஸ்அப் இலக்கத்தின் மூலம் கல்வி நிலையங்களில் மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்கள் குறித்து அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.