நான்கு வயது பூர்த்தியாகும் குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி கட்டாயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகள் சார்பாக அரசாங்கம் தலையிடுவதாகவும், தேவையின் அடிப்படையில் இடவசதி உள்ள தொடக்கப் பாடசாலைகளில் முன் குழந்தைப் பருவ மேம்பாட்டு மையங்களை நடத்தலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் இடம்பெற்ற “ஆரோக்கியமான வாழ்வு – மகிழ்ச்சியான இதயம்” என்ற தொனிப்பொருளின் கீழ் பாடசாலை சுகாதார மேம்பாட்டு மாதத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், மூடப்படும் என்ற அச்சுறுத்தலை எதிர்நோக்கும் பாடசாலைகளுக்கு இம்முறை தீர்வாக அமையும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
” கல்வி சீர்திருத்தங்களில் வெற்றி பெறுவதற்கான மிக அடிப்படையான நடவடிக்கை இந்நாட்டில் உள்ள குழந்தைகளின் முறையான ஆரம்ப குழந்தைப் பருவ வளர்ச்சியாகும்.
உலகில் இலவசக் கல்வியை வழங்கும் சில நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்நாட்டு அரசாங்கம் முதலாம் தரம் முதல் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சர்வதேச மட்டத்திற்கு சமாந்தரமாக இந்நாட்டில் முன்பள்ளிக் கல்வியை முறைப்படி தரப்படுத்த வேண்டுமானால், “பாலர் பாடசாலை என்பது பாடசாலைக்குச் செல்லும் முன் செல்லக்கூடிய மற்றுமொரு பாடசாலையே ” என்ற மனப்பான்மை முற்றிலும் மாற வேண்டும்.” என தெரிவித்தார்.
இதேவேளை, பாடசாலைகளில் உணவு வழங்கும் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர்,
இவ்வாண்டுடன் ஒப்பிடுகையில், மொத்த மாணவர் எண்ணிக்கையை விட அதிகமான மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.
எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் மதிய உணவுப் பலன்களைப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிக வீதத்தால் மேம்படுத்தப்படும்” என தெரிவித்தார்.