இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.
ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் சோதனைச்சாவடிக்கள் மீது நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலை தொடர்ந்து காசா முனையில் உள்ள பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய எல்லைப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இஸ்ரேலிய பாதுகாப்புப்படையினருக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் இஸ்ரேலிய பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த மோதலால் இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.