30 வருட கால யுத்தத்தை தொடர்ந்து இலங்கை மக்கள் எதிர்நோக்குகின்ற மிகப்பாரிய சவால்களில் ஒன்று போதைப்பொருள் பாவனையும் விற்பனையும் சார்ந்த பிரச்சினையாகும்.
இப்பிரச்சினையை எதிர்நோக்குவதில் இந்நாட்டில் வாழ்கின்ற எல்லா சமூகங்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்ற சூழ்நிலையில் குறிப்பாக அண்மைக்காலமாக முஸ்லிம்கள் வாழ்கின்ற பிரதேசங்களிலும் நாட்டின் பல பகுதிகளிலும் போதைப்பொருளுக்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் அவதானிக்ககூடியதாக இருக்கிறது.
அந்தவகையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவாட்டத்தில் இந்த போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வும் நடவடிக்கைகளும் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டு அதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான ஒரு பாரிய முன்னெடுப்பை அப்பகுதியில் வாழ்கின்ற சமூக நிறுவனங்களும் பள்ளிவாசல்களும் மார்க்க தலைமைகளும் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், அக்கரைப்பற்றில் ‘போதை பொருள் பாவனை மற்றும் விற்பனைக்கு எதிரான தன்னிலை பிரகடனம்’ விழிப்புணர்வு நிகழ்வு நேற்றையதினம் செப்டம்பர் (01) ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து அக்கரைப்பற்று மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் இடம்பெற்றது.
இதில் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாயல்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா- அக்கரைப்பற்று கிளை, தக்வா ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம், தஃவா அமைப்புகள், சிவில் நிறுவனங்கள், இளைஞர் மற்றும் விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதேவேளை போதைப் பாவனையில் இல்லாத இளைஞர்களை பாதுகாக்கும் முகமாக லகூன் அமைப்பின் உறுப்பினர் L.A.M. நப்ஸான், இலங்கை முழுவதுமான 25 மாவட்டங்களை தொடும் நோக்கில் விழிப்புணர்வு சைக்கிள் சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.
அந்தவகையில், நப்fஸான் அவர்களுக்கு அழைப்புவிடுத்து, அவரை வரவேற்று, அவருக்கு ஊக்கங்களை அளித்து இந்த தன்னிலை பிரகடனத்தில் கலந்துகொள்ள செய்தமைக்கு புத்தளம் லகூன் அமைப்பு சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
போதைப்பொருள் வர்த்தகம், துஷ்பிரயோகம் மற்றும் கடத்தல் ஆகியவை இலங்கை எதிர்கொள்ளும் மிகப்பெரிய சமூக, பொருளாதார மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளில் ஒன்றாகும்.
போதைப்பொருட்களின் பாவனையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் இந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையவில்லை. இன முரண்பாடுகளை அடுத்து, நாடுகடந்த போதைப்பொருள் கடத்தலில் இலங்கை பிரஜைகள் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.
அதற்கமைய கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனம், கொழும்பு மாநகரசபையுடன் இணைந்து போதைப்பொருளை ஒழிப்பதற்கும், குடும்பம் மற்றும் திறமையான அதிகாரிகளுக்கு இடையே தொடர்ச்சியான ஒற்றுமையின் முக்கியத்துவத்தை சமூகத்திற்கு எடுத்துரைப்பதற்கும், குழந்தைகளை அதில் விழுவதிலிருந்து பாதுகாப்பதற்கும் விரிவான விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பித்ததும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில் இத்தகைய சிவில் சமூகம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளோடு மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்ளாது இதனை இந்நாட்டிலிருந்து முழுமையாக துடைத்தெறிவதற்காக நிகழ்கால திட்டமொன்றை இந்நாட்டில் வாழ்கின்ற அனைத்து தலைமைகளும் இணைந்து முன்னெடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.