ஆக்கிரமிப்பு இஸ்ரேல் மீது பலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தின் கஸ்ஸாம் படையினர் அதிரடியாக மேற்கொண்ட தூபான் அல் கஸ்ஸாம் தாக்குதலை வீரச் செயலாக ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனியா வர்ணித்துள்ளார்.
பின்விளைவுகள் இல்லாமல் முன்னேறிச் செல்ல முடியாது என்பதை எதிரிகள் உணரும் தருணம் வந்து விட்டது என கஸ்ஸாம் படையணித் தலைவர் முஹம்மத் தீப் தெரிவித்துள்ளார்.
அதிரடியாக இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய அதிர்ச்சியில் இஸ்ரேல் உறைந்து போயிருக்கும் நிலையில் தரைவழியாக காஸாவில் ஊடுருவுதற்கான முயற்சிகளை இஸ்ரேல் மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பலஸ்தீன் மீதான யுத்தத்தை பிரகடனப்படுத்தியுள்ள இஸ்ரேலியப் பிரதமர் நெடன்யாஹு, காஸா மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் எனவும் காஸாவிலுள்ள 23 இலட்சம் மக்களையும் அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவித்துள்ளார்.
நேற்றைய தினத்தைக் கரிநாளாக அறிவித்துள்ள அவர் இதற்காக நாம் பழிவாங்குவோம் எனவும் அறிவித்துள்ளார். உயிரிழந்த அனைத்து இளைஞர்களுக்காகவும் நாம் பழி வாங்குவோம். ஹமாஸ் நிலைகொண்டுள்ள அனைத்து இடங்களையும் குறிவைப்போம்.
காஸாவை தரைமட்டமாக்குவோம். காஸா மக்களுக்கு நான் சொல்கிறேன். அங்கிருந்து வெளியேறி விடுங்கள். ஒவ்வொரு முலை முடுக்கையும் நாங்கள் தாக்குவோம் என இஸ்ரேலியப் பிரதமர் சூளுரைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள தூபான் அல் அக்ஸா நடவடிக்கைகள் மேற்குக் கரைக்கும் ஜெரூஸலத்துக்கும் விஸ்தரிக்கப்படும் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இவர்களுடன் பலஸ்தீனில் இயங்கும் இராணுவ அமைப்பான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்துள்ளது.
லெபனானில் இருந்து இஸ்ரேலுக்கெதிராகப் போராடிவரும் ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தையும் தம்மோடு இணைந்து கொள்ளுமாறு ஹமாஸ் அழைப்பு விடுத்துள்ளது.