தொடரும் சீரற்ற காலநிலை: 12 மாவட்டங்களைச் சேர்ந்த 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Date:

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலநறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் ஏற்படும் ஆபத்துகளை தவிர்ப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 12 மாவட்டங்களை சேர்ந்த 48,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, மாத்தறை, காலி, நுவரெலியா, புத்தளம், குருநாகலை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 12,120 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்திலே அதிகளவான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், 220 குடும்பங்களை சேர்ந்த 930 பேர் தற்காலிக தங்குமிடங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று (05) மற்றும் நாளை (06) ஆகிய இரு தினங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...