பலஸ்தீனத்தின் காஸாவில் அப்பாவி பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானப் படை குண்டுமழை பொழிந்ததில் 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். தற்போது உலக நாடுகள் இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
காஸாவின் Al-Ahli Baptist Hospital- இந்த மருத்துவமனைதான் இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான யுத்தத்தில் சிக்கிய பல்லாயிரம் அப்பாவிகள் தஞ்சமடைந்திருந்த அகதிகள் முகாமாக இருந்த இந்த மருத்துவமனையை இலக்கு வைத்து செவ்வாய்க்கிழமை (இரவு நேற்று இரவு) இஸ்ரேலிய விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. சில நிமிடங்களிலேயே இந்த மருத்துவமனை தரைமட்டமானது.
இஸ்ரேலின் இந்த திடீர் தாக்குதலில் அகதிகளாக தஞ்சமடைந்த 500க்கும் மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் இந்த தாக்குதல் ஹமாஸ் ஆதரவு நாடுகளை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அதிரவைத்துள்ளன.
இஸ்ரேலின் இத்தாக்குதலை ஐநா அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் Al-Ahli Baptist மருத்துவமனையானது Anglican Church நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் கிறிஸ்தவ தேவாலய நிர்வாகங்களும் இஸ்ரேலின் தாக்குதலை பகிரங்கமாக கண்டித்து வருகின்றன. இதனையடுத்து இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலின் இந்த போக்கையும், கடும் தாக்குதலையும் கண்டிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பிடன் இஸ்ரேலுக்கு வரும் நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அதுவும் கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்திய மருத்துவமனை மீதான தாக்குதல் இஸ்ரேலை ஒட்டுமொத்த உலகத்துக்கு எதிராக திருப்பிவிட்டிருக்கிறது. காஸா மீதான 11-வது நாள் யுத்தம் இப்படி ஒரு பெரும் துயரத்தையும் திருப்பத்தையும் எதிர்பார்த்திருக்காது. இதனால்தான் இஸ்ரேல் இப்போது, ஹமாஸ் போராளிகள் ஏவிய ஏவுகணை தவறுதலாக வெடித்து சிதறி மருத்துவமனை மீது விழுந்து விட்டதாக பதறியடித்து விளக்கம் தருகிறது.
இஸ்ரேலின் இந்த உக்கிரத் தாக்குதலைக் கண்டித்து பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஜோர்டானில் இஸ்ரேல் தூதரகமே தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேலின் இந்த யுத்தத்தின் போக்கும் தீவிரமும் குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
