உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்பு பரீட்சைத் திணைக்களம் வருடாந்தம் நடத்தி வந்த அல்ஆலிம் பரீட்சையை நிறுத்தியதால் அரபுக் கல்லூரி மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பிட்ட அல்ஆலிம் பரீட்சை இறுதியாக 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்பு, தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களில் பலர் அல்ஆலிம் பட்டம் பெற்றவர்கள் எனக் கண்டறிந்த அரசாங்கம் அப்பரீட்சையை நடத்தாமலிருக்க தீர்மானித்ததாகத் தெரியவருகிறது.
2019 முதல் இன்று வரை அல்ஆலிம் பரீட்சை நடத்தப்படாமலிருப்பதற்கு அல்ஆலிம் பரீட்சைக்கு பயிலும் மாணவர்களுக்கு ஒழுங்கான பாடத் திட்டம் அமுலில் இல்லை என்றே காரணம் கூறப்பட்டு வந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தக் காரணத்தையே தெரிவித்துள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் ஏற்பாடு செய்த கலந்துரையாடல்கள், பாராளுமன்ற தெரிவுக் குழு கூட்டங்களில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகள், முஸ்லிம் கல்விமான்கள், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துக் கூறியும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
இது தொடர்பில் ‘கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களத்தின் அதிகாரிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் இதுவரை அல்ஆலிம் பரீட்சைக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்விப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கல்வி அமைச்சினால் சமய ஆலோசனை சபையின் கூட்டமொன்று அண்மையில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்திலும் பரீட்சைக்கான பாடத் திட்டம் தொடர்பில் வினவப்பட்டது. அல்ஆலிம் பரீட்சைக்கான பாடத்திட்டம் சம்பந்தப்பட்ட தரப்புக்கு ஏற்கனவே கையளிக்கப்பட்டு விட்டதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் சமய ஆலோசனை சபையில் அங்கம் வகிக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டார்கள்.
கல்வி அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அல்ஆலிம் பரீட்சை நடத்துவது பற்றிய தீர்மானத்தை விரைவில் அறிவிப்பதாக அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எதுவித பதிலும் வழங்கப்படவில்லை.
தற்போது ஐந்து வருட காலமாக அல்ஆலிம் பரீட்சையை நடத்தாது நிறுத்தி வைத்திருப்பது மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.