மினுவாங்கொடை – கல்லொழுவை, அல் – அமான் முஸ்லிம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்துக்கு அருகாமையில், புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள மூன்று மாடிக் கட்டிடத் தொகுதியின் திறப்பு விழாவை, எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை நடத்துவதற்கு விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்விழாவை, அன்றைய தினம் வெகு விமர்சையாக நடத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல், வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம். ஆஸிம் தலைமையில் வித்தியாலய பிரதான மண்டபத்தில், (05) ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது.
இவ்விசேட கலந்துரையாடல் நிகழ்வில், பிரதேசத்திலுள்ள முஸ்லிம் அமைப்புகள், சங்கங்கள், புத்திஜீவிகள், நலன் விரும்பிகள் என பல்வேறு துறை சார்ந்த முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.
நிகழ்வின் இறுதியில், பழைய மாணவரும் கல்லொழுவை ஜும்ஆப் பள்ளிவாசல் ஆயுட்காலத் தலைவருமான அல் ஹாஜ் ஏ.எச்.எம். முனாஸ் தலைமையிலான அல் – அமான் பழைய மாணவர் சங்கத்தின் முகாமைத்துவக் குழுவினர், புதிய கட்டிடத்தின் “அல்ஹாஜ் லியாஉல் பௌஸ்” கேட்போர் கூடத்திற்குத் தேவையான பெறுமதி மிக்க ஒரு தொகை மின் குமிழ்களை, பாடசாலை அதிபரிடம் மண்டபத்தில் வைத்து கையளித்தனர்.
தொழிலதிபர் அல்ஹாஜ் லியாஉல் பௌஸினால், அவரது பெற்றோர்களின் ஞாபகார்த்தமாக, இம்மூன்று மாடிக் கட்டிடத் தொகுதி, அவரது சொந்த செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐ. ஏ. காதிர் கான் -( மினுவாங்கொடை – கட்டுநாயக்க செய்தியாளர் )