தமிழ்நாட்டின் பள்ளப்பட்டி ஜாமிஆ உஸ்வத்துல் ஹஸனா ஷரீஅத் கல்லூரியில் மூன்று நாட்கள் தேசிய அளவிலான ஃபிக்ஹ் (இஸ்லாமிய சட்டத்துறை) மாநாடு நேற்று நடைபெற்றது.
இஸ்லாமிய கல்வியியல் கலைகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் மாநாடு இது. மனிதனின் புதிய கண்டுபிடிப்புகளையும், உலகில் ஒவ்வொரு காலத்திலும் உண்டாகும் புதிய சிக்கல்களையும் இஸ்லாமிய ஆய்வுக்குட்படுத்தி முஸ்லிம் உம்மத்துக்கு ஹலால் ஹராம் எல்லைக்கோட்டை வரையறை செய்யும் இதுபோன்ற கூட்டு ஆய்வரங்கங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.
இந்திய முழுவதுமிருந்து ஃபிக்ஹ் கலையில் நுண்ணறிவுமிக்க அறிஞர்கள் பள்ளப்பட்டியில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஒன்றுகூடியிருப்பது தமிழக முஸ்லிம்களுக்கு பெருமைக்குரிய விடயம்.
கேரளாவில் உள்ள ஜாமிஆக்களில் இதுபோன்ற தலைப்புகளில் சர்வதேச அளவிளான மாநாடுகள் மிகச்சாதாரணமாக நடைபெறுகின்றன.சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதனால் கேரள அரபுக்கல்லூரி மாணவர்களின் அறிவும் தேடலும் சர்வதேச தரத்திற்கு விசாலமடைகிறது.
அதனால் உந்தப்பட்டவர்கள் மக்கா மதீனா எகிப்து துனீசியா மலேசியா போன்ற நாடுகளில் உள்ள சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகங்களில் உயர்க் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
அல்குர்ஆன்,தஃப்ஸீர்,ஹதீஸ்,ஃபிக்ஹ்,தஸவ்வுஃப், இஸ்லாமிய வரலாறு உள்ளிட்ட இஸ்லாமிய கல்வியியல் கலைகளில் கூட்டாக ஆய்வுகளை மேற்கொள்ளும் அறிஞர்கள் குழு தமிழகத்தின் அனைத்து அரபு மதரஸாக்களிலும் வீரியமாக இயங்க வேண்டும் என்ற ஆசையும் ஆதங்கமும் எல்லோருக்கும் இருக்கிறது.
இளம் ஆலிம்களிடம் ஆய்வுச் சிந்தனையும் கூட்டு கலந்துரையாடலும் அதிகரிக்க அதிகரிக்க முஸ்லிம் வெகுஜனத்தின் பண்பாட்டிலும் அன்றாட வாழ்வியலிலும் இஸ்லாமிய ஒளி மின்னுவதை காணலாம்.
இஸ்லாமிய அறிவுத்துறையை நவீனகாலத்தின் தேவைகளுக்கேற்ப மீள்கட்டமைப்பு செய்யாமல் அத்தகைய முயற்சிகளுக்கு பெருமளவுக்கு துணைநிற்காமல் அதற்கு பொருளாதார உதவிகள் செய்யாமல் முஸ்லிம் உம்மத்தில் என்ன மாற்றங்களை கொண்டு வந்துவிட முடியும்….?
இந்த மாநாடு புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது. தொடர்ச்சியாக நடைபெறவேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.