இளைஞர்களுக்கு மீண்டும் எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாவதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பாலுறவு நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் திலானி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2022ல் எயிட்ஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 607 பேரில் 73 பேர் இளைஞர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும் டிசம்பர் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கொழும்பு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டு முதல், 15 முதல் 24 வயது வரையிலான இளைஞர் சமூகத்தில் எயிட்ஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது.
2022ஆம் ஆண்டில் புதிய எயிட்ஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 73 பேர் இளைஞர்கள். அதாவது 12 வீதம். அவர்களில் 66 பேர் ஆண்கள். எனவே, இளைஞர்களிடையே எயிட்ஸ் தடுப்பு மிகவும் முக்கியமானது.
நம்பகமான துணையுடன் உடலுறவு கொள்ளுங்கள். பிற தொடர்புகள் இருந்தால் பாதுகாப்பு நடவடிக்கையாக ஆணுறையைப் பயன்படுத்துவது முக்கியம். எங்கள் நாடு முழுவதும் ஏற்கனவே 41 கிளினிக்குகள் இலவச ஆணுறைகளை வழங்குகின்றன.” என அவர் தெரிவித்துள்ளார்.