ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலைத்தீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹை நேற்று வியாழக்கிழமை (16) மாலைத்தீவு ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய விவகாரங்கள் மற்றும் பொருளாதார நிலையில் இருந்து இலங்கை எவ்வாறு படிப்படியாக மீள்கிறது என்பது குறித்து இருவரும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
நாட்டின் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்தும் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் மாலைத்தீவு ஜனாதிபதியும் ஆராய்ந்துள்ளனர்.
தனது நிர்வாகத்தின் கீழ் பல இருதரப்பு உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு ஒத்துழைத்தமைக்காக ஜனாதிபதிக்கு மாலைத்தீவு ஜனாதிபதி நன்றிகளை தெரிவித்தார்.
இலங்கைக்கு மாலைத்தீவு வழங்கிய உதவிகள் மற்றும் ஆதரவுகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக முகமது மூயிஸ் பதவியேற்கவுள்ளார். இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாலைத்தீவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.