எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை உரையாற்ற விடாது இடையூறு விளைவித்த பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயக மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் இன்று ( 21) உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வியொன்றின் போதே பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தலைமையிலான குழு எதிர்க்கட்சி தலைவருக்கு இடையூறுகளை ஏற்படுத்தியதுடன், சபையில் அமையின்மைக்கும் வழிவகுத்தது.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, சபாநாயகரின் அனுமதியுடனே சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியிருந்தார் எனக் கூறினார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, லக்ஷ்மன் கிரியெல்ல விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்து, இவ்விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ ஆவணங்களை பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த பறித்துச் சென்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.