இந்திய நாடாளுமன்ற மக்களவையில் திடீரென நுழைய முயன்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களவையில் கண்ணீர் புகை வீசப்பட்டதால் எம்.பிக்கள் சிலர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய அமர்வின் போது, பார்வையாளர் மாடத்திலிருந்து திடீரென குதித்த 2 பேர், இருக்கைகளின் மீது ஏறி சபாநாயகர் மாடத்தை நோக்கி ஓட முயற்சித்தனர்.
கண்ணீர் புகை குப்பிகளை வீசினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மடக்கிப் பிடித்த காவலர்கள் கைது செய்தனர்.
அதேபோல் நாடாளுமன்றத்தின் வளாகத்திலும் கண்ணீர் புகை குப்பிகளை வீசிய இருவரை காவலர்கள் கைது செய்தனர். 2 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 4 பேர் இந்த சம்பவத்தில் கைதாகி உள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து நாடாளுமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருவரையும் பிடித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பா.ஜ.க எம்பி ஒருவரின் பரிந்துரை கடிதத்தின் பெயரிலேயே இந்த நபர்கள் பார்வையாளர்கள் மாடத்துக்கு அனுமதிக்கப்பட்டதாக காங்கிரஸ் தரப்பிலிருந்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.