இஸ்ரேல் தனது கட்டுமான தொழிலாளர்களுக்கான பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை வரவழைக்க திட்டமிட்டு வருகிறது.
கடந்த அக்டோபர் 7ஆம் திகதி முதல் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான கடும் போர் நீடித்து வருகிறது. அதன் காரணமாக இஸ்ரேலில் வேலை செய்த ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் அந்நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.
இஸ்ரேலின் மூன்றாவது பெரிய துறையான கட்ட நிர்மாணத் துறையில், போர் ஆரம்பமாகும் முன்னர் சுமார் 82 ஆயிரம் பலஸ்தீனர்கள் தொழில் புரிந்து வந்தனர்.
தற்போது, அவர்கள் மாத்திரமின்றி சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பா நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் ஊழியர்களும் இஸ்ரேலை விட்டு வெளியேறி சொந்த நாடுகளுக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.
இதன் காரணமாக, இஸ்ரேல் முழுவதும் நிர்மாணப்பணிகள் முழுமையாக நடைபெறாததால் அந்நாட்டின் பொருளாதாரத்தை கணிசமாகப் பாதித்துள்ளது.
அத்துடன், ஹமாஸை எதிர்த்துப் போரிட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இஸ்ரேலின் இராணுவத்துடன் இணைந்துள்ளதால், நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.
இதன் காரணமாக இஸ்ரேலின் தொழிலாளர் பற்றாக்குறை கடுமையாகி உள்ளது.
நாட்டின் ஆகப்பெரிய பொருளியல் துறைகளில் ஒன்றான நிர்மாணத்துறையின் 2022ஆம் ஆண்டுக்கான சந்தை மதிப்பு 71 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என இஸ்ரேல் நிர்மாணத்துறை சங்கம் மதிப்பிட்டுள்ளது.
போருக்கு முன்னர் நடைபெற்ற நிர்மாணப் பணிகளில் 15 வீதம் மட்டுமே தற்போது நடந்து வருகின்றன.
எனவே, அந்தத் துறையை மீட்டெடுக்கபுதிய வெளிநாட்டு தொழிலாளர்களை உடனடியாக பணியில் அமர்த்த வேண்டிய கட்டாயம் இஸ்ரேல் அரசாங்கத்துக்கு ஏற்பட்டு உள்ளது.
அதன் ஒரு முயற்சியாக, இஸ்ரேல் நிர்மாண சங்கத்தின் பிரதிநிதிகள் அடுத்த சில தினங்களில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வந்து, பல்வேறு கட்டுமானப்பணிகளில் வேலை செய்ய தொழிலாளர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கெனவே கடும் நிதி நெருக்கடியில் உள்ளதாகவும் இனியும் காலம் தாழ்த்த முடியாது எனவும் இதனால்,வெகு விரைவில் 10 ஆயிரம் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்ல உள்ளதாகவும் சங்கத்தின் துணைத் தலைமை பணிப்பாளர் ஷாய் பாஸ்னர் தெரிவித்துள்ளார்.