களனி பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் நான்கு மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் ஓய்வறையில் உறங்கிக்கொண்டிருந்த போது கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டு, நுழைவாயிலில் கட்டிவைக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று (04) இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து மருத்துவ பீடம் தவிர்த்து களனி பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, மருத்துவ பீடத்தை தவிர்த்து களனி பல்கலைக்கழகத்தின் அனைத்து விடுதிகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.
அத்துடன், அனைத்து மாணவர்களும் இன்று காலை 8 மணிக்கு முன்னதாக குறித்த விடுதிகளைவிட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது.
மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மத்தியில் இதுவரை நிலவிய அமைதியான சூழ்நிலை சவாலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், களனி பல்கலைக்கழகத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனவும், உரிய நபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், களனிப் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய தலுகமவில் உள்ள பல்கலைக்கழக வளாகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் அனைத்து உள்ளக மற்றும் வெளி விடுதிகள், மருத்துவ பீட மாணவர்கள் தவிர்ந்த ஏனைய பீட மாணவர்களுக்கான விடுதிக்கள் மறு அறிவித்தல் வரை மாணவர்களுக்கு தடைசெய்யப்பட்ட பிரதேசங்களாகும் என பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுப்பதற்கு இரண்டு குழுக்கள் நியமிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.