பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ‘ஆலா’ என்ற இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி , கடந்த திங்கட்கிழமை (4) இரவு விசேட தகவல் ஒன்றினை அடுத்து அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிநடத்தலில் பொலிஸ் குழுவினர் மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் சிவில் உடையில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது குறித்த ‘ஆலா’ என்ற பெயர் கொண்ட 39 வயதுடைய முஹம்மது இஸ்மாயில் அஸ்மீர் எனும் இளைஞனை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.
இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்ட இளைஞன் தடுமாறிய நிலையில் அருகில் உள்ள கடலுக்கு சென்று பாய்ந்து தப்பி செல்ல முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் நீச்சல் தெரியாது திணறிய ‘ஆலா’ என்ற இளைஞனை கைது செய்த பொலிஸ் குழு 100 கிராம் கஞ்சாவினை கைப்பற்றியுள்ளனர்.
மறுநாள் செவ்வாயக்கிழமை (5) சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.