2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அனுமதி வழங்கியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் (13) நிறைவேற்றப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் அங்கீகாரத்துடன் 2023ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமூலமாக நடைமுறைப்படுத்தப்படும் என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சர் என்றவகையில் கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
தொடர்ந்து வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை இடம்பெற்றது.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்றைய தினம் பிற்பகல் இடம்பெற்ற நிலையில், 45 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் கடந்த நவம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் நேற்று வரை நடைபெற்றது.
இதன்படி, நேற்று மாலை இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 81 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
இதற்கமைய, வரவு – செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.