குவைத்தில் இயங்கும் சமூக சேவை நிறுவனமான “ஜம்மியத்துல் இஸ்லாஹ்” வின் கீழ் இயங்கும் “மக்தப் தஆவுன் அல் இஸ்லாமி” ஏற்பாடு செய்திருந்த கடற்கரை சுத்திகரிப்பு நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை (24) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
குவைத் நாட்டை சுத்தமாகவும், அழகாகவும் வைப்போம்” எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்வு அமைந்திருந்தது. இந்நிகழ்ச்சியின் முக்கியத்துவம் மற்றும் வழிகாட்டல்களை “Kuwait Diving Team” வழங்கியது.
இந்நிகழ்வு குவைத் மற்றும் குவைத் வாழ் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆகிய பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், மாணவர்களின் ஒத்துழைப்புடனும், ஒருங்கிணைப்புடனும் இடம்பெற்றது.
சுற்றுச்சூழல் மாசடைதல் (Environmental pollution ) இன்று மனிதனும், தாவரங்களும், விலங்குகளும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் பெரும் பிரச்சினையாகும்.
மனித செயற்பாடுகள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் முக்கிய கூறுகளான காற்று (Air Pollution), நீர் (Water Pollution), மண் வளங்களும் (Soil Pollution), அங்கு வாழும் உயிரினங்களும் (Biodiversity loss) பாதிப்புக்குள்ளாகி, அதனால் இயற்கை சூழலின் சமநிலை சீரற்றுப் (Ecological imbalance) போவதால் முழு சூழற்தொகுதியுமே (Damaged ecosystem) பாதிக்கப்படுகிறது .
எனவே சூழல் மாசடையாமல் பாதுகாத்துக்கொள்வது சம்பந்தமான இவ்வாறான விழிப்பூட்டல் நிகழ்ச்சிகள் காலத்தின் தேவையாகும்.
விஷேடமாக மாணவர்கள், எதிர்கால தலைமுறையினரை கொண்டு இவ்வாறான நிகழ்ச்சிகள் செயற்படுத்தப்படல் வேண்டும்.