காலி மாவட்ட முஸ்லிம் இளங்கலைப் பட்டதாரிகள் வலையமைப்பு கடந்த வருடம் (2023.12.25) ஆம் திகதி கிந்தோட்டை ஸாஹிரா தேசிய கல்லூரி பிரதான மண்டபத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
காலி மாவட்ட முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய இந்நிகழ்வினை Forum for Education & Ethical Development (FEED) – Gintota நிறுவனம் ஏற்பாடு செய்து ஒழுங்குபடுத்தியது.
Forum for Education & Ethical Development (FEED) – Gintota நிறுவனத்தின் தலைவர் எம்.கே.எம். றஸ்மி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கையின் மிகப் புகழ்பூத்த புத்திஜீவிகளுள் ஒருவான கலாநிதி ரவுப் ஸெய்ன் (Phd, M.Phil, MA, BA) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு “கல்வித்துறையிலும் சமூக முன்னேற்றத்திலும் பல்கலைக்கழகப் பட்டதாரிகளின் வகிபாகம்” என்ற தலைப்பில் விஷேட சிறப்புரையாற்றினார்.
அத்தோடு இந்நிகழ்வில் கா/ ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபரும் தற்போதைய காலி மாவட்ட காதி நீதவானுமாகிய எம்.எச்.எம். ஜிப்ரி, கா/ ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபரும் முன்னாள் காலி மாவட்ட காதி நீதவானுமாகிய எம்.ஏ.எம். ஆரிப், காலி ஹாலி எல முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல்.ஏ. மொஹமட், கிந்தோட்டை ஸாஹிரா தேசிய கல்லூரியின் பிரதி அதிபர்களான எம்.பீ. மின்னதுர்ரஹ்மான் மற்றும் எம். ஸமீர் ஆகியோரும் விஷேட அதிதிகளாகக் கலந்து கொண்டு சிறப்புரைகளை ஆற்றினர். கா/ மள்ஹருஸுல்ஹியா தேசிய பாடசாலையின் பிரதி அதிபர்களுள் ஒருவரான அஷ்ஷெய்க் ஜே.எம். ஹிபிஷி (கபூரி) அவர்கள் இந்நிகழ்ச்சியின் நிகழ்ச்சி நிரலை சிறப்பாக நடாத்தியதோடு, FEED – Gintota நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் எம்.என்.எம். முப்லில் அவர்கள் இவ்வமர்விற்கான ஏனைய ஏற்பாடுகளை முன்னின்று நடாத்தினார்.
காலி மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்லிம் இளங்கலைப் பட்டதாரிகளையும் இணைத்து ஒரு அமைப்பாக இயங்குவதன் மூலம் மாவட்ட முஸ்லிம் மாணவர்களின் கல்வி மற்றும் திறன்சார் விருத்தி செயற்றிட்டங்கள், இளைஞர் வலுவூட்டல் செயற்றிட்டங்கள், பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கான வழிகாட்டல்கள் நிகழ்சிகள்போன்றவற்றனை முன்னெடுக்கும் பல்வேறுபட்ட நோக்கங்களோடு மேற்கொள்ளப்பட்ட இவ்வமர்வில் சுமார் 150 இலங்களைப் பட்டதாரிகள் கலந்து கொண்டதோடு, “காலி மாவட்ட முஸ்லிம் இளங்கலைப் பட்டதாரிகள் வலையமைப்பு” அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு அதற்கான நிறைவேற்றுக்குழுவும் தெரிவு செய்யப்பட்டது.
இவ்வலையமைப்பின் வட்ஸ்அப் குழுமத்தில் இதுவரை 260 க்கு மேற்பட்ட இளங்கலைப் பட்டதாரிகள் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வமைப்பினை காலி மாவட்டத்தில் உருவாக்குவதற்காக கடுமையாக உழைத்த Forum for Education & Ethical Development (FEED) – Gintota நிறுவனம் கடந்த 9 வருடங்களாக கல்வி மற்றும் விழுமிய எழுச்சி சார் செயற்றிட்டங்களை மாகாண மட்டத்தில் சிறப்பாக மேற்கொண்டு வருவதோடு, தென்மாகாணத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்படும் முஸ்லிம் இளம்கலைப் பட்டதாரிகளுக்கு மாதா மாதம் புலமைப் பரிசில் உதவுதொகை வழங்கும் செயற்றிட்டமொன்றினை கடந்த 8 வருடங்களாக மேற்கொண்டு வருகின்றது. அல்ஹாஜ் எம்.டீ.எம். இம்திஸாம் என்ற தனவந்தரின் நிதிப் பங்களிப்பில் மேற்கொள்ளப்படும் இச்செயற்றிட்டத்திலிருந்து இதுவரை 470 ற்கு மேற்பட்ட இளங்கலைப் பட்டதாரிகள் நிதியுதவி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டிய எதிர்காலத்தில் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இதே போன்ற இளங்கலைப் பட்டதாரிகள் வலையமைப்பினை உருவாக்கும் முயற்சிகளில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.