இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் பாகிஸ்தான் நாட்டையும் முன்னாள் பிரதமர் இம்ரான்கானையும் மறக்கமாட்டார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி தமது பதவிக் காலத்தை முடித்து நாடு திரும்புவதால் அவருக்கான பிரியாவிடை வைபவம் இலங்கை சுற்றுலாத்துறை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.எம். ஜவ்பர் ஏற்பாட்டில் கொழும்பு சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்றது.
இதன்போது ரவூப் ஹக்கீம் கூறுகையில், முன்னாள் ஜனாதிபதியும் அவரது அரசும் சில அதிகாரிகளும் கொவிட் 19 காலத்தில் முஸ்லிம்களது ஜனாசாக்களை எரித்தார்கள்.அதனை இலங்கை வந்திறங்கிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் ஆரவாரமில்லாமல் அமைதியாக முன்னாள் ஜனாதிபதியிடம் பேசி முஸ்லிம் ஜனசாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி பெற்றுக் கொடுத்தார்.
மேலும் ஜக்கிய நாடுகள் மனித உரிமை சபையிலும் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் வாக்கெடுப்பாக பாகிஸ்தான் இலங்கைக்கு வாக்களிப்பதற்காக சில நாடுகளின் ஆதரவுகளைப் பெற்றுக் கொடுத்தார்.
இனரீதியாகவும், உலக சுகாதார கொவிட் சுற்றறிக்கை மீறியும் இலங்கையில் கொவிட் மரணிப்பால் முஸ்லிம்களது ஜனாசாக்கள் பலவந்தமாக எரிக்கப்பட்டு வந்தன.
இதனை தடுத்து எமக்கு அடக்கம் செய்வதற்கு அனுமதி பெற்றுக் கொடுத்தவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களே என ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இவ் வைபத்திற்கு இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக், சுற்றலாத்துறை மற்றும் கானியமைச்சின் செயலாளர் சுற்றுலா ஊக்குவிப்பு நிறுவனத்தின் தலைவர் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள், முஸ்லிம் கெல்ப் நிறுவனத்தின் மிஹ்லார் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.