தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 16வது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் பெப்ரவரி மாதம் சனிக்கிழமை ( 10) , ஞாயிற்றுக்கிழமை (11) இரண்டு நாட்களும் நடைபெறவுள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் இரண்டு நாட்களும் தலா 3 அமர்வுகளாக மொத்தமாக ஆறு அமர்வுகளாக இந்த பட்டமளிப்பு நடைபெறவுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்துள்ளார்
முதலாவது நாளின் முதலாவது அமர்வில் கலை கலாசார பீடத்தினைச் சேர்ந்த 342 மாணவர்களும், இரண்டாவது அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடங்களைச் சேர்ந்த 355 மாணவர்களும் ,மூன்றாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 430 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை (11) நான்காவது அமர்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தைச் சேர்ந்த 314 பட்டதாரிகளும், ஐந்தாவது அமர்வில் கலை கலாசார பீடங்களைச் சேர்ந்த வெளிவாரி பட்டதாரிகள் 350 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஆறாவது அமர்வில் கலை கலாசார மற்றும் முகாமைத்துவ பீடங்களைச் சேர்ந்த வெளிவாரி பட்டதாரிகள் 361 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் 1414 உள்வாரி பட்டதாரிகளும், 711 வெளிவாரி பட்டதாரிகளுக்குமாக மொத்தம் 2152 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.