கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல்-பலஸ்தீன போர், தற்போது வரை நீடித்து வருகிறது.
இந்நிலையில் விரைவில் இரண்டாவது முறையாக தற்காலிக போர் நிறுத்தம் சாத்தியப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக பிரான்ஸில் சிஐஏ, மொசாட் மற்றும் கத்தார் பிரதமர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக அரபு நாடுகளும், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளும் தொடர்ந்து முயன்று வருகின்றன.
ஆனால், போர் பல்வேறு நாடுகளுக்கு நீடிக்கும் என்று அஞ்சப்படுகிறது. குறிப்பாக செங்கடல் பகுதியில் வரும் சரக்கு கப்பல்களை ஈரானின் ஹவுதி படைகள் தாக்குவதால், அமெரிக்காவும், பிரிட்டனும் ஈரான் மீது தாக்குதலை தொடுத்திருக்கிறது.
இந்த தாக்குதலுக்கு இருநாடுகளும் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளும் என ஈரான் எச்சரித்துள்ளது. இதனால் மத்திய தரைக்கடல் பகுதிக்கு போர் நீடிக்கும் அபாயம் எழுந்திருக்கிறது.
இப்படியே போனால் சரிபட்டு வராது என உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன. எனவே போரை நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதத்தில் நோர்வே நாட்டில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது பாரிஸில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், சிஐஏ தலைவர் வில்லியம் பர்ன்ஸ், மொசாட் தலைவர் டேவிட் பார்னியா, ஷின் பெட் தலைவர் ரோனென் பார், கத்தார் பிரதம மந்திரி முகமது அல்-தானி மற்றும் எகிப்திய புலனாய்வு சேவைகளின் தலைவர் அப்பாஸ் கமல் என முக்கிய நபர்கள் பங்கேற்றிருக்கின்றனர்.
இந்த முறை 60 நாட்கள் போர் நிறுத்தம் நீடிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதற்கான முடிவை நோக்கி பேச்சுவார்த்தை நகர்ந்துக்கொண்டிருப்பதாக சர்வதேச செய்தி ஊடகங்கள் தெரவிக்கின்றன.