அயோத்தியில் ராமர் கோயில் தயார் ; பாபர் மசூதி எங்கே?; இதுவரை எந்தவித கட்டுமானப் பணிகளும் நடைபெறவில்லை

Date:

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ஆம் திகதி வந்துவிட்டால் போதும், நாடு முழுவதும் பதற்றம் தொற்றிக் கொள்ளும்.

ஏனெனில் 1992ஆம் ஆண்டு அதே நாளில் தான் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

இதில் சிவசேனா, விஷ்வ ஹிந்து பரிஷத், பாஜக உள்ளிட்ட தலைவர்களின் முன்னிலையில் கரசேவர்கள் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

பின்னர் ராமர் பிறந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாக இந்து அமைப்புகள் நீதிமன்றத்தை நாடின. பல ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு 2019ல் முடிவுக்கு வந்தது.

ஒட்டுமொத்த 2.77 ஏக்கர் நிலத்தை ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளை வசம் ஒப்படைத்தது. முஸ்லிம்கள் மசூதி கட்டிக் கொள்ள ரோஹானி என்ற இடத்தில் 5 ஏக்கர் அளவிற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டது. இந்த தீர்ப்பை முஸ்லிம்கள் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டனர்.

எந்தவித போராட்டங்களிலும் ஈடுபடவில்லை. பிரச்சினையும் செய்யவில்லை. இது நடந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. ராமர் கோயிலை கட்டி அங்கு  கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் மசூதி கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் இதுவரை எந்தவித கட்டுமானப் பணிகளும் நடைபெறவில்லை. இதற்கு என்ன காரணம்? என்ற கேள்விக்கு சில முக்கியமான பதில்கள் கிடைத்துள்ளன.

வக்ஃபு வாரியம் நடவடிக்கை

இந்த நிலம் வக்ஃபு வாரியத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இவர்கள் தான் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை விட மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் வகையில் மசூதி கட்டுவதற்கு திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

இதன் மாதிரி வடிவமும் வெளியாகி கவனம் பெற்றது. ஆனால் அதன்பிறகு எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஏனெனில் நிதி ஒதுக்கீட்டில் சிக்கல் நிலவுகிறது.

வக்ஃபு வாரியத்திற்கு போதிய நிதி இதுவரை வந்து சேரவில்லை. அப்புறம் எப்படி வேலைகள் நடக்கும் எனக் கேள்வி எழுப்புகின்றனர்.

ராமர் கோயில் கட்டுவதற்கு நாடு முழுவதிலும் உள்ள பக்தர்களிடம் 30 ஆண்டுகளுக்கும் மேல் நிதி திரட்டப்பட்டு வந்துள்ளது.

ஆனால் முஸ்லிம்களுக்கு அப்படியான சூழல் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. அதேசமயம் 5 ஏக்கர் நிலத்தில் முழுமையான மசூதியை கட்ட முடியாது என்கின்றனர்.

சரியான சாலை வசதிகளும் இல்லை என்கின்றனர். எனவே போதிய வசதிகள் உடன் பெரிய மசூதி கட்டுவதற்கு அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

தற்போதைய சூழலில் மசூதியின் வடிவமைப்பை மாற்றும் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சமூக உணவுக்கூடம் ஆகியவற்றுடன் புதிய வடிவில் மசூதி கட்டப்படவுள்ளது. இதன்மூலம் சமூக நல்லிணக்கத்தை கடைபிடிக்க விரும்புகின்றனர்.

இந்நிலையில் இந்தோ – இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளையின் மேம்பாட்டு குழு தலைவர் ஹாஜி அர்பாத் ஷேக் கூறுகையில், வரும் மே மாதம் மசூதி கட்டுமானப் பணிகள் தொடங்கும்.

இது ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் புனித மாதம். அதன்பிறகு 3 முதல் 4 ஆண்டுகளில் மசூதி கட்டி முடிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...