சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு மற்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரி பீட்டர் ப்ரூயர் (Peter Breuer) உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவு எனக்கூறி மக்களுக்கு பெரும் வரிச்சுமையை ஏற்படுத்து பெறுமதி சேர் வரி (VAT) உட்பட பல்வேறு வகையான வரிகளை தற்போதைய அரசாங்கம் அபரிமிதமாக அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக பொது மக்கள், கர்ப்பிணிகள், சிறுவர்கள், நடுத்தர வர்க்கம், அரச ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் அநாதரவாகியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் இடையிலான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய, தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர்.