காஸாவில் குழந்தைகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு உதவும் வகையில் அனைத்து அமைச்சுக்களதும் அரச நிறுவனங்களதும் இப்தார் நிகழ்ச்சிகளை ரத்து செய்வதற்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் மனூஷ நாணயக்கார தெரிவித்தார்.
நேற்றைய தினம் குவைத்தின் தேசிய தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இதனைத் தெரிவித்தார்.
காஸாவில் அல்லல்படும் குழந்தைகளுக்காக காஸா சிறுவர் நிதியம் (children of Gaza Fund) ஒன்றைத் தோற்றுவிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனைக்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சுக்களதும் அரச நிறுவனங்களதும் இப்தார் செலவுகளுக்கான நிதியை இந்த நிதியத்துக்கு வழங்குமாறு ஜனாதிபதியும் பிரதமரும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
இந்த நிதியத்தினூடாக 01 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் சேகரித்து ஐக்கிய நாடுகள் சபையின் முகவர்கள் ஊடாக பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த நிதியத்துக்கு பொதுமக்களும் பங்களிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது. நன்கொடைகளை 11.04.2024 க்கு முன்னர் இலங்கை வங்கியின் (7010) தப்ரோபேன் (747) கிளைகளில் 7040016 எனும் ஜனாதிபதியின் செயலாளரின் கணக்கு இலக்கத்துக்கு வைப்பிலிடுமாறும் அதற்கான பற்றுச் சீட்டை 0779730396 எனும் இலக்கத்துக்கு வட்ஸ்அப் செய்யுமாறும் ஜனாதிபதி செயலகம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.