இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்துக்கு முன்பாக மீனவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு மீனவ சங்கங்கள் இணைந்து இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடவுள்ளதாக முன்னதாக அறிவிப்பு விடுத்திருந்தமையினால் தூதரகத்துக்கு முன்பாக பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், மீனவர்கள் ஒன்று திரண்டு பேரணியாக சென்று துணைத் தூதரகத்தை முற்றுகையிட முற்பட்டபோது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மீனவ சங்க பிரதிநிதிகள் 8 பேர் மாத்திரம் தூதரகத்துக்கு சென்று துணைத் தூதுவரைச் சந்தித்து மனுவொன்றை கையளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்ததாக
தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்திய இழுவை படகு உரிமையாளர்களே எங்களையும் வாழ விடு, கடற்தொழிலாளர்களை பிரித்தாழும் தந்திரத்தை செய்யாதே, தொப்புள் கொடி உறவுகளை பிரிக்காதே, இந்திய அரசே இலங்கையின் வடபகுதி கடற்றொழிலாளர்களை திரும்பிப்பார், அத்து மீறும் இந்திய மீனவரின் அராஜகம் அடியோடு ஒழிய வேண்டும், சட்டவிரோத அத்துமீறலை தடுத்து நிறுத்து, வடக்கு கடற்றொழிலாளர்களின் வளங்களை சூறையாடாதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.