சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த சாந்தன் இன்று காலை உயிரிழந்த நிலையில், பிரேத பரிசோதனைகள் முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாந்தன் காலமானதை தொடர்ந்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை பணிப்பாளர் தோரணி ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, சாந்தனுக்கு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இன்று காலை 4 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவரது தீவிர சிகிச்சை கொடுத்து கண்காணிப்பில் வைத்திருந்தோம். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.50 மணிக்கு காலமானார் என்று தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
சாந்தன் இலங்கை தமிழர் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டார். தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரி வந்தார் சாந்தன். சாந்தனை இலங்கை அனுப்பி வைக்க மத்திய அரசும் அனுமதி வழங்கியது.