உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நேற்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆனாலும், அரசாங்கம் இந்த விடயத்தில் தொடர்ந்தும் அசமந்தப்போக்கில் செயற்படுவதை சுட்டிக்காட்ட வேண்டிய கடப்பாடு எமக்குள்ளது.
குறிப்பாக, விவசாயம் என்பது இந்த நாட்டின் முதுகெலும்பாகும். விவசாயிகள் மீதான அடக்குமுறையே கடந்த கோட்டா அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய ஒரு காரணமாகும்.
அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, பொத்துவில், அக்கரைப்பற்று, இறக்காமம், வரிப்பத்தாஞ்சேனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் அதிகமான விவசாயிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடனிலிருந்து மீள முடியாமல் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கான காப்புறுதித் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதாக கூறியிருந்தாலும், அவர்கள் அந்தத் திட்டத்தில் சரியான முறையில் உள்வாங்கப்படவில்லை. அ
வர்களுக்கான கொடுப்பனவுகளை உரிய முறையில் வழங்குவதற்கு எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதை வேதனையோடு தெரிவித்துக்கொள்கின்றேன்.
மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களில் கூட விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கான காப்புறுதித் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என அறியமுடிகின்றது.
அண்மையில் இடம்பெற்ற மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில், விவசாயிகள் மிகவும் வேதனையுடன் தாம் எதிர்நோக்குகின்ற கஷ்டங்களை கூறியிருந்தார்கள்.
சில பகுதிகளில் குறிப்பிட்ட காப்புறுதித் திட்டம் நடைமுறையில் இருந்தாலும், அவை ஒருதலைப்பட்சமாகவும் அதிகாரிகளுக்கு விரும்பிய வகையில் வழங்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே, விவசாய அமைச்சர் இந்த விடயத்தில் கவனஞ்செலுத்தி, கடனிலிருந்து விவசாயிகளை காப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
அதேபோன்று, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை.
அல்குர்ஆனை அல்லது ஒரு அரபுப் புத்தகத்தை வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டுவர முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.
கோட்டாபய ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அரபுப் புத்தகங்களை இந்த நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று, அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
உலக மக்கள் அனைவராலும் அறியப்படுகின்ற, போற்றப்படுகின்ற இஸ்லாமியர்களின் வேதநூலான அல்குர்ஆனைக் கூட இந்த நாட்டிற்குள் கொண்டுவர முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
அரபுக் கல்லூரிக்கு தேவையான புத்தகங்களைக் கூட கொண்டுவர முடியாதுள்ளது. ஆன்லைனில் அனைத்துவிதமான புத்தகங்களையும் படிக்கக்கூடிய சூழலில் நாம் இருக்கின்ற போதும், இலங்கையில் மாத்திரமே இவ்வாறு புத்தகங்களைக் கொண்டுவருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
அரபு நாடுகளில் இருந்துவரும் சுற்றுலாப் பயணிகள், அவர்களுக்கு தேவையான ஒரு புத்தகத்தை கொண்டுவரும் பட்சத்தில் அதை பறித்தெடுக்கின்றனர்.
இந்தப் பிரச்சினைக்கு ஜனாதிபதி ஒரு நிமிடத்தில் தீர்வுகாண முடியும். எனவே, தற்போது பாதுகாப்பு அமைச்சராக இருக்கின்ற ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளருக்கு குறித்த கடிதத்தினை மீளப்பெற அறிவுறுத்துமாறு வேண்டிக்கொள்கின்றேன்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கும் அந்தப் பள்ளிவாசலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க விரும்புகின்றேன்’ என்றார்.