ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு 7-வது முறையாக பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆரத் தழுவி வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து இரு நாடுகளிடையேயான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
பிரதமர் மோடி இன்றும் நாளையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் 14-15 திகதிகளில் கத்தாருக்கும் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.
இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆரத் தழுவி வரவேற்றார். மேலும் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் பேசிய பிரதமர் மோடி, தங்களது அன்பான வரவேற்புக்கு மிக்க நன்றி. உங்களை சந்திக்க வரும் ஒவ்வொரு முறையும் என் குடும்பத்தினரை சந்திப்பது போல உணருகிறேன். கடந்த 7 மாதங்களில் 5 முறை நாம் சந்தித்துள்ளோம். நமது இருதரப்பு உறவில் இத்தகைய சந்திப்பு அரிதானவை என்றார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் முன்னிலையில் இருநாடுகளுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
7-வது முறையாக எமிரேட்ஸ் பயணம்: முன்னதாக தமது வெளிநாட்டு பயணத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியிருந்தாவது, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நான் மேற்கொள்ளும் ஏழாவது பயணமாகும். 2014-ம் ஆண்டுக்குப் பிறகு கத்தாருக்கு நான் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.
#WATCH | Abu Dhabi, UAE: Prime Minister Narendra Modi and President of UAE Sheikh Mohamed bin Zayed Al Nahyan, share a hug. PM Modi was also accorded Guard of Honour upon his arrival. pic.twitter.com/MSLhuTEv8d
— ANI (@ANI) February 13, 2024
அபுதாபியில் இந்து ஆலயம் திறப்பு:
இந்தப் பயணத்தின்போது, அபுதாபியில் முதலாவது இந்து ஆலயத்தையும் திறந்து வைக்க உள்ளேன்.
இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் பகிர்ந்து கொள்ளும் நல்லிணக்கம், அமைதி, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மதிப்புகளுக்கு பிஏபிஎஸ் கோயில் ஒரு நிலையான புகழாரமாக இருக்கும். அபுதாபியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அனைத்து இந்திய சமூகத்தினரிடமும் நான் உரையாற்ற உள்ளேன்.
கத்தாரில், அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியை சந்திப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.
அவரது தலைமையின் கீழ் கத்தார் தொடர்ந்து மிகப்பெரிய வளர்ச்சியையும் மாற்றத்தையும் கண்டு வருகிறது. கத்தாரில் உள்ள இதர முக்கியப் பிரமுகர்களையும் சந்திக்க ஆவலாக உள்ளேன்.
இந்தியாவும், கத்தாரும் வரலாற்று ரீதியாக நெருக்கமான நட்புறவைக் கொண்டுள்ளன.
சமீப ஆண்டுகளில், இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் வர்த்தகம் மற்றும் முதலீடு, நமது எரிசக்தி பங்களிப்பை வலுப்படுத்துதல், கலாச்சாரம் மற்றும் கல்வியில் ஒத்துழைப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நமது பன்முக உறவுகள் தொடர்ந்து ஆழமடைந்து வருகின்றன.
தோஹாவில் 8,00,000-க்கும் மேற்பட்ட வலுவான இந்திய சமூகத்தினர் இருப்பது இருநாட்டு மக்களுக்கு இடையேயான வலுவான உறவுகளுக்குச் சான்றாகும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.