ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில் அடிக்கடி தாமதம் ஏற்படுகின்றமை மற்றும் முன் அறிவித்தலின்றி இரத்து செய்யப்படுகின்றமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணியாளர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பயணிகள் சிரமத்திக்குள்ளாவதை ஏற்றுக்கொள்ள முடியாது என எயார்லைன்ஸ் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவையில் பணியாளர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் அனுபவமுள்ள பணியாளர்கள் சேவையிலிருந்து விலகி வெளிநாட்டு விமான நிறுவனங்களில் இணைந்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சுதந்திர தொழிற்சங்கத்தின் தலைவர் ஜனக விஜயபதிரத்ன தெரிவித்தார்.
இந்த பிரச்சினைக்குத் தீர்வாக அனுபவமுள்ள பணியாளர்களை இணைத்துக் கொள்ளுமாறும், தற்போது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு சொந்தமான விமானங்களுக்கு இணையான புதிய விமான அட்டவணையை தயாரிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில் தாமதம் ஏற்படுகின்றமையாலும் இரத்து செய்யப்படுவதாலும் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக விமான சேவையில் ஏற்பட்ட பயண இடையுறுகளுக்கு ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கோரியிருந்த நிலையிலும் தொடர்ச்சியாக விமான சேவையில் தாமதம் ஏற்படுகின்றமை வருத்தமளிப்பதாக தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை 2021 ஆம் ஆண்டில் 45 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டிருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் கொள்கை விளக்க உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
தொடர்ச்சியாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நஷ்டத்தில் இயங்குவதாவே நாடாளுமன்ற பொதுக்கணக்காய்வு அறிக்கையிலும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இன்று (25) ஏற்பட்ட விமான தாமதம் தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது.
தற்காலிக மற்றும் திட்டமிடப்படாத செயற்பாடுகள் காரணமாக இந்த தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
தாமதத்தினால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு பயணிகளிடம் மன்னிப்பு கோருவதாகஅந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.