டெல்யின் இந்திரலோக் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சாலையில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இஸ்லாமிய மக்களை காலால் எட்டி உதைத்த காவல் உதவி ஆய்வாளருக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சமீபத்தில் சமூகவலைத்தளங்கள் வழியாக வீடியோ ஒன்று வைரலாக பரவி வந்தது. அதில் டெல்லி இந்திரலோக் பகுதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் காலால் எட்டி உதைப்பதும், தாக்குவதும் பதிவாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்த மக்கள் கூடி அந்தக் காவலரை எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவத்திற்குப் பின்னர் மாலை 6 மணியளவில் அங்குள்ள மெட்ரோ ரயில்நிலையம் அருகே கூடிய மக்கள் காவல்துறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
नमाज़ पढ़ते हुए व्यक्ति को लात मारता हुआ ये @DelhiPolice का जवान शायद इंसानियत के बुनियादी उसूल नहीं समझता, ये कौन सी नफ़रत है जो इस जवान के दिल में भरी है, दिल्ली पुलिस से अनुरोध है कि इस जवान के खिलाफ़ उचित धाराओं में मुक़दमा दर्ज करिये और इसकी सेवा समाप्त करिये।
— Congress, Minority Department (@INCMinority) March 8, 2024
இந்த வீடியோ எக்ஸ் (ட்விட்டர்) உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பலவற்றிலும் வைரலானதை தொடர்ந்து குறிப்பிட்ட காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்தது.
இந்தச் செயலில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் தோமரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது டெல்லி காவல்துறை.
அவர் மீது துறைரீதியான விசாரணையை நடத்த உள்ளதாகவும், அதற்கு முன்னர் உடனடியாக அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
சமீப காலமாகவே மசூதிகள் அல்லாத பொதுவெளிகளில் தொழுகை செய்வது தொடர்பான சர்ச்சைகள் ஏற்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே ஹரியாணாவின் குருகிராமில் பொதுவெளியில் தொழுகை நடத்துவதை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஹரியானாவின் குருகிராமில், சாலையில் தொழுகை செய்வது தொடர்பான பிரச்னையில் கும்பல் ஒன்று மசூதியை தாக்கி தீ வைத்ததில் 26 வயதான இமாம் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தெற்கு ஹரியானாவில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
மூலம்: பிபிசி