இலங்கையில் இயங்கும் இஸ்லாமிய நிறுவனங்களுக்கிடையே பரஸ்பர அறிமுகத்தையும் புரிந்துணர்வையும் சமூக நலன் சார்ந்த விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான சூழலையும் ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய ஐக்கியப் பேரவைக்கான யாப்பு வரையும் பணிக்காக முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எம்எம் அப்துல் கபூர் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழனன்று (22) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் 30 அமைப்புக்கள் அங்கம் வகிக்கின்ற இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் தலைவர்கள் மற்றும் பிரதிநிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்தக் குழு நியமிக்கப்பட்டது.
பேரவையின் நடப்புத் தலைவர் அஸ்-ஸெய்யித் ஸாலிம் ரிபாய் மௌலானா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் யாப்பு தயாரிக்கும் குழுவுக்கான பல்வேறு ஆலோசனைகளையும் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் பலரும் முன்வைத்தனர்.
முன்னாள் நீதிபதி அப்துல் கபூர் தலைமையிலான யாப்பு தயாரிக்கும் குழுவில் சட்டத்தரணி ட்டீ.கே.அஸூர், சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன், சட்டத்தரணி எஸ்எம்என்எஸ்ஏ மர்ஸூம் மௌலானா, சிரேஷ்ட ஆய்வாளர் எம் அஜ்வதீன், இறைவரித் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் நாயகம் அஷ். என்எம்எம் மிப்லி, இலங்கை மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் Dr.ருவைஸ் ஹனிபா ஆகியோர் அடங்குகின்றனர். ஞாயிறன்று (25) யாப்பு தயாரிக்கும் குழுவினருக்கும் இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் ஸ்தாபகர்களுக்கும் இடையில் முன்னாள் நீதிபதி அப்துல் கபூர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து யாப்பு தயாரிக்கும் பணிகளை குழுவினர் ஆரம்பித்துள்ளனர்.