பலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்து வந்த இஸ்ரேல், சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக கான் யூனிஸ் பகுதியிலிருந்து தனது படைகளை திரும்ப பெற்றிருக்கிறது.
இதனையடுத்து தங்கள் வீடுகளை தேடி வந்த பலஸ்தீன மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கான் யூனிஸ் பகுதி முற்றிலுமாக இஸ்ரேல் ராணுவத்தால் அழிக்கப்பட்டிருக்கிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துவது குறித்து பல்வேறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் கூட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இதற்கு தயாராக இல்லை. காசாவில் ஹமாஸ் படையை ஒழிக்கும் வரை போர் தொடரும் என்று அவர் கொக்கரித்துள்ளார்.
இவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இஸ்ரேல் நாட்டு மக்களே இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மறுபுறம் ஐநா சபையில் போர் நிறுத்தம் குறித்து சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தீர்மானத்தை கொண்டுவரும் போதெல்லாம் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தள்ளுபடி செய்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்கா கொண்டு வந்த போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஆனால் அதே நேரம், இஸ்ரேலுக்கு தற்போதுவரை அமெரிக்கா ஆயுதங்களை விநியோகம் செய்து வருகிறது. இதனால் சுமார் 33,000க்கும் அதிகமான பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏவுகணைகளும், பீரங்கி குண்டுகளும் தாக்கி பலர் கொல்லப்பட்டாலும், போர் ஏற்படுத்தியுள்ள பசி, பட்டினியாலும் உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
சர்வதேச நாடுகள் அனுப்பிய உணவு, மருந்து பொருட்கள் எகிப்தின் ராஃபா எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
போரில் பட்டினியை இஸ்ரேல் ஆயுதமாக பயன்படுத்துவதாக ஐநா குற்றம் சாட்டியுள்ளது. ஐ.நா மனித உரிமை அலுவலக செய்தித் தொடர்பாளர் ஜெரமி இந்த குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்.
கடந்த டிசம்பர் மாதம் இந்த நகரின் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தொடங்கியது. இது ஹமாஸின் கோட்டை என்று இஸ்ரேல் கூறியது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் ஏதும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.
இன்று இஸ்ரேலின் 98வது படை இங்கிருந்து திரும்பப்பெறப்பட்டிருப்பது போர் நிறுத்தத்தை சாத்தியப்படுத்துவதற்கு கிடைத்த முக்கிய வெற்றி என்று சொல்லப்படுகிறது.